Showing posts with label காஷ்மீர். Show all posts
Showing posts with label காஷ்மீர். Show all posts

Wednesday, September 15, 2010

காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு

‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.

காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.

காஷ்மீரில் ‘அமைதி’யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம். அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.

‘‘தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை” எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?

ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?

****

தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா?
1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர். அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.

அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் “தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.

காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான், இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.

காஷ்மீர்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 'காணாமல் போனவர்களின்' புகைப்படங்களைப் பார்ர்த்து விம்மியழும் காஷ்மீரத்துத் தாய்

இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.

இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன.

வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை. இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது. அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது. காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, “காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்” என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.

ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.

‘‘துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது” என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.
காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. “விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்” என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, “லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்” என அவதூறு செய்து வருகிறது.

சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். “அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி” என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர். இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?

பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, “உன்னைக் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர். அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான். ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?

இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான “இந்தியர்கள்” எழுப்ப மறுக்கிறார்கள். “அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்” என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்.

காஷ்மீர்

காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரியக்கூடாது என்ற நோக்கில், இந்திய இராணுவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாட்டுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளகர் நடத்தும் ஆர்பாட்டம்

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.

ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, “அரசின் மீது போர் தொடுத்த” குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா? விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.

காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது” ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.

ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது. இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர். விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.

‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.

இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Tuesday, August 11, 2009

காஷ்மீர் அரசுக்கு பெரும் சிக்கல்

ஜம்மு பகுதியை காஷ்மீர் மாநில அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று பல ஆண்டுகளாக ஜம்மு மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய முதல்வர் குலாம் நபி ஆசாத், ஜம்முவில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்,காஷ்மீரில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த பல்கலைக்கழகம் ஜம்முவில் அமைக்கப்படும், ஸ்ரீநகரில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால், ஜம்மு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதன்பிறகு ஆட்சிமாறியது.

மத்திய பல்கலைக்கழகம், தலைநகர் ஸ்ரீநகரில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஜம்மு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, டெல்லிக்கு சென்ற முதல்வர் உமர் அப்துல்லா, 2 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்க மத்திய அரசின் அனுமதியை பெற்றார். ஜம்முவில் ஒன்றும், ஸ்ரீநகரில் ஒன்றும் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து சற்று அமைதி ஏற்பட்டது.

இந்த நிலையில், ஸ்ரீநகரில் மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஊழியர்கள் விண்ணப்பிக்க கேட்டு, நாளிதழ்களில் கடந்த 20 நாட்களுக்கு முன் விளம்பரம் வெளியானது. ஆனால், ஜம்முவில் தொடங்குவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதையடுத்து ஜம்மு மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

கடந்த 19 நாட்களாக ஜம்முவில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராரட்டம் நடத்தி வருகின்றனர். இது பற்றி ஜம்மு மாணவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் புபிந்தர் சிங் கூறுகையில், ஜம்முவை மாநில அரசு புறக்கணிப்பது புதிதல்ல,. ஜம்முவில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதில் அரசுக்கு சிறிதும் ஆர்வம் இல்லை.

மாணவர்கள் சங்க போராட்டத்தினால்தான், 2 பல்கலைக்கழகங்கள் தொடங்க முதல்வர் அனுமதி பெற்றார். ஆனால், அதை தொடங்குவதில் பாரபட்சம் காட்டுகிறார்.

ஜம்மு சம்பா பகுதியில் மத்திய பல்கலைக்கழகத்தை உடனே தொடங்க வேண்டும். அத்துடன், ஸ்ரீநகரில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தொடங்கினால், ஜம்முவிலும் தொடங்க வேண்டும்.

அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். போராட்டம் தீவிரமாகாமல் தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இல்லாவிடில் கடந்த ஆண்டு அமர்நாத் விவகாரத்தில் நடந்த போராட்டம் போல் மிகப் பெரும் போராட்டமாக மாறும் என்பது உறுதி என்றார்.

Saturday, August 8, 2009

இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்!!

இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்

காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதையும், அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதையும் பார்த்து அம்மாநில மக்கள் சுதந்திரம் கேட்பதை விட்டுவிட்டு, மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாக இந்திய அரசு மயக்கம் கொண்டிருந்தது. இந்த மயக்கத்தை அம்மாநிலத்தின் தென்பகுதியிலும் தலைநகர் சீறிநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் கலைத்துப் போட்டுவிட்டன.

காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஷோபியன் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நீலோஃபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் மே 29 அன்று அக்கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் தங்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர். அதிகாலை யிலேயே சென்றுவிட்ட அவ்விருவரும் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால், நீலோஃபரின் கணவர் இது பற்றி அருகிலுள்ள போலீசு நிலையத்தில் புகார் அளித்தார்.

மறுநாள் அதிகாலை நேரத்தில், நீலோஃபரின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓடும் சிற்றாறு ஒன்றில் அந்த இரு இளம் பெண்களின் சடலங்கள் போலீசாலும் பொதுமக்களாலும் கண்டுபிடிக்கப்பட்டன. உடலெங்கும் காயங்களோடும் ஆடைகள் கிழிந்த நிலையிலும் அவர்களது சடலங்கள் ஆற்றின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தன. அகால ‘மரணமடைந்த’ நீலோஃபர் நிறைமாதக் கர்ப்பிணி என்பதும் ஆஸியா ஜான் படிப்பில் கெட்டிக்கார மாணவி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்விரு இளம் பெண்களும் இறந்து கிடந்த நிலையைப் பார்த்த பொதுமக்கள், “அவர்கள் போலீசாராலோ அல்லது இராணுவச் சிப்பாகளாலோ கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்” எனச் சந்தேகம் கொண்டனர்.

இந்த மர்மமான ‘மரணங்கள்’ பற்றி விசாரணை நடத்தி, பிரேதப் பரிசோதனை நடத்தி மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிய போலீசாரோ சடலங்களைப் பார்த்த நிமிடமே, “அவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்து போனதாகத் தெரிவதாகவும், பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை என்றும்” முடிவு செய்தனர். மேலும், இச் சம்பவம் பற்றி உடனடியாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவும் மறுத்து விட்டனர். காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லாவும் போலீசாரின் தடாலடி முடிவுக்கு ஒத்தூதினார்.

‘‘அரசாங்கமும் போலீசும் யாரையோ பாதுகாக்க முயலுவதாக’’ச் சந்தேகப்பட்ட பொதுமக்கள், அவ்விரு இளம் பெண்களின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். இதனையடுத்து, அப்பெண்களின் சடலங்கள் ஷோபியன் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எனினும், போலீசின் நெருக்குதல் காரணமாக அரசு மருத்துவர்கள் ‘இம்மரணங்கள்’ பற்றி எவ்வித முடிவையும் அறிவிக்காமல் மௌனமாக இருந்துவிட்டனர். எனவே, வேறு நடுநிலையான மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.

புல்வாமா நகரைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் நடத்திய இரண்டாவது பிரேதப் பரிசோதனையும், அப்பெண்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார்களா இல்லையா என்பது பற்றியோ, அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்பது பற்றியோ முடிவான அறிக்கை எதனையும் தரவில்லை என்றே கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மும்மரமாகத் திரிந்த போலீசார், இரண்டாவது பிரேதப் பரிசோதனை முடிந்தவுடனேயே அச்சடலங்களைப் புதைத்துவிடுமாறு கூறிவிட்டனர். புதைக்கப்பட்ட சடலங்களை மீண்டும் தோண்டியெடுப்பது உள்ளூர் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் எனக் கூறி, மூன்றாவது பிரேதப் பரிசோதனை என்ற யோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது, மாநில அரசு.

தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க ஏகப்பட்ட உளவுப் பிரிவுகளை வைத்திருக்கும் அரசுக்கு, இந்த ‘மரணங்களுக்கு’ப் பின்னுள்ள மர்மங்களைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமொன்றும் இருந்திருக்க முடியாது. போலீசும், அரசும், தேசியவாதிகளும் கூறிவருதைப் போல இந்த மரணங்கள் விபத்தினால் நேர்ந்தவை என்பது உண்மையாகவே இருந்தாலும், அவ்வுண்மையை காசுமீர் மக்கள் நம்பக்கூடிய நடுநிலையான அமைப்பின் மூலம் நிரூபிப்பதற்கும் அரசு தயாராக இல்லை. மாறாக, மக்களின் கோபத்திற்கு வடிகால் வெட்டுவதற்காக, வழக்கம் போலவே விசாரணை கமிசன்களை அமைத்திருக்கிறது, அம்மாநில அரசு. மேலும், நியாயம் கேட்டுப் போராடும் மக்களை ஒடுக்குவதற்காக பொது அமைதியைப் பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்துவரும் மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு சிறுவன் இறந்து போனான். சையத் ஷா கீலானி, ஷாபிர் ஷா, மிர்வாயிஸ் உமர் ஃபாரூக், யாசின் மாலிக், ஜாவேத் மிர் ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலிலும், சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மக்கள் போதிய ஆதாரங்கள் எதுவுமின்றி போலீசையும் துணை இராணுவப் படைகளையும் சந்தேகிப்பதாக இந்திய தேசியவாதிகள் அலுத்துக் கொள்கிறார்கள். ஒரு குற்றம் நடந்தால், அது பற்றி விசாரிக்க போலீசார் பழைய குற்றவாளிகளை விசாரிக்க ‘அழைத்து’ச் செல்வதில்லையா? அது போலத்தான் காஷ்மீர் மக்களின் சந்தேகத்தையும் பார்க்க வேண்டும்.

ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்த சமயத்தில், காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளோடு நடந்த ‘மோதலில்’ ஐந்து முசுலீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஐவரும் எல்லைதாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். இப்படுகொலையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராடி யிருக்காவிட்டால், அந்த ஐவரும் சிட்டிசிங்புரா கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி முசுலீம்கள் என்ற உண்மை வெளியுலகுக்குத் தெரிந்திருக்காது.

ஜம்மு-காஷ்மீர் போலீசுத் துறையைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைக் குழு பணம், பதவிகளைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அப்துல் ரஹ்மான் பத்தர், ஷௌகத் கான், நஸிர் அகமது தேகா உள்ளிட்ட பல அப்பாவி முசுலீம்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி சுட்டுக் கொன்ற உண்மை 2007-இல் அம்பலமானது. இப்படுகொலைகளுக்கான ஆதாரங்களை அழித்துவிட்டதாக மப்பில் திரிந்த காக்கிச்சட்டை கிரிமினல்களை காஷ்மீர் மக்களின் போராட்டம்தான் சட்டத்தின் முன் நிறுத்தியது.

போலீசோ அல்லது பாதுகாப்புப் படையினரோ இவ்விரு பெண்களையும் கடத்திக்கொண்டு போ, பாலியல் பலாத்காரப்படுத்திய பின் கொன்றிருக்கக்கூடாதா என்ற கேள்வியை எழுப்ப மறுக்கும் இந்திய தேசிய வாதிகள், இப்படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு நடக்கும் போராட்டங்களை, அப்போராட்டங்கள் இந்திய இராணுவத்தைக் குற்றம் சுமத்தும் ஒரே காரணத்திற்காகவே, அவற்றை இனவெறியையும், மதவெறி யையும் தூண்டிவிடும் போராட்டங்கள் என அவதூறு செய்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துவிட்ட பிரிவினைவாதிகள் மீண்டும் செல்வாக்குப் பெறவே மக்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சுமத்துகிறார்கள்.

காஷ்மீரின் தென்பகுதியில் போராடிவரும் மக்கள் “குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டி!” எனக் கோரிதான் போராடுகிறார்களேயொழிய, சுதந்திரம் கேட்டுப் போராடவில்லை. ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டும் காஷ்மீர் மக்களை அணுகும் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கட்டுமே, யார் வேண்டாமென்று சோன்னது? பிரிவினைவாதிகளைவிட, காங்கிரசுக் கும்பல் உள்ளிட்ட இந்திய தேசியவாதிகள்தான் காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாமல் தனிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

நீலோஃபரும், ஆஸியாவும் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுத்தான் கொல்லப்பட்டனர் என்பது நிரூபணமானால், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமே போராட்டங்கள் வெடித்துவிடும் என்பதனால்தான், ஷோபியன் போலீசார் முதல் பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்களிடம், “அப்பெண்கள் பாலியல் பலாத்காரபடுத்தப்பட்டிருந்தால் அவ்வுண்மையை மறுக்க வேண்டும் அல்லது மழுப்ப வேண்டும்” என நெருக்குதல் கொடுத்ததாகவும்; இரண்டாவது பிரேதப் பரிசோதனையை நடத்திய மருத்துவர்களுள் ஒருவர் ஷோபியன் நகர மக்களிடம் அவர்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுள்ள உண்மையைச் சோன்னதற்காக மாவட்ட போலீசு கண்காணிப்பாளரால் கடிந்து கொள்ளப்பட்டதாகவும் “தெகல்கா” வார இதழில் (20 ஜூன் 2009) பிரேம் சங்கர் ஜா என்றொரு பத்திரிகையாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்திய தேசியவாதிகள் அவதூறு செய்து வருவது போல காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் உண்மையைக் கண்டுபிடிக்கத் தடையாக இல்லை. மாறாக, அதிகார வர்க்கம்தான், உண்மை வெளியே தெரிந்தால், இந்திய தேசியம் நாறிவிடும் என்பதால், உண்மையை அமுக்கிவிட முயன்று வருகிறது என்று கூற வேண்டும்.

பிரிவினைவாதத்தையோ, பிரிவினைவாத அமைப்புகளையோ ஏற்றுக் கொள்ளாத காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முசுலீம் அறிவுத் துறையினர்கூட, இராணுவமும், போலீசும் வரைமுறையின்றி நடத்திவரும் மனித உரிமை மீறல்களும், இராணுவமும், துணை இராணுவப் படைகளும் திரும்பப் பெறப்படாமல் காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுதான் மக்களின் சந்தேகங்களுக்கும் போராட்டங்களுக்கும் அடிப்படையாக அமைகின்றன எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இவையனைத்தும் காஷ்மீர் அமைதியாக இல்லை என்பதைத்தான், இந்திய தேசியத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தும் எந்தவொரு அமைப்பையும் அம்மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. அதனால்தான் சந்தேகத்திற்கிடமான ஒவ்வொரு மரணமும், சந்தேகத்திற்கிடமான அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் (அமர்நாத் கோயில் நில மாற்றம் போன்றவை) அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்புகளை உருவாக்கிவிடுகிறது. இப்போராட்டங்களை அவதூறு செய்தோ அடக்குமுறைகளை ஏவியோ ஒடுக்கிவிட இந்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அம்முயற்சிகள் அனைத்தும் எரிகிற நெருப்பில் எண்ணெ வார்ப்பது போலவே அமைந்து விடுகின்றன.

குட்டு உடைகிறது!

காஷ்மீர் மக்கள் நடத்திய போராட்டங்களையடுத்து, அம்மாநில அரசு, “நீலோஃபர் ஜானும், ஆஸியா ஜானும் இறந்து போனதற்கான உண்மையான காரணத்தையும், சூழ்நிலையையும் மற்றும் இப்பிரச்சினையை யொட்டி நடந்த போராட்டங்களை அரசு அணுகிய விதம் குறித்தும்” விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற ஜம்மு-காஷ்மீர் உயர்நீதி மன்ற நீதிபதி முஸாபர் ஜான் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் ஒன்றை அமைத்தது. அக்கமிசன் அளித்துள்ள இடைக்கால அறிக்கையில், “அப்பெண்கள் பாலியல் பலாத்காரப் படுத்தப்பட்டுப் பின் கொல்லப்பட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக”ச் சுட்டிக் காட்டி யிருக்கிறது. மேலும் போலீசார், பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரிகள், தடய அறிவியல் நிபுணர்கள் ஆகியோரின் திறமையின்மையாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் இந்த ஆதாரங்கள் அழிந்து போவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இதனையடுத்து, போலீசு மற்றும் மருத்துவ துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் இடைக்காலப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

“ஆதாரங்கள் ‘அழிந்து’ போகும் அளவிற்கு திறமைக் குறைவாக நடந்து கொள்ளக் காரணம் என்ன?” என்ற கேள்விக்கான பதிலை இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளிடமிருந்து வாங்கிவிட்டால், இந்த ‘மர்ம’ மரணங்களுக்குப் பின்னுள்ள பெரிய மனிதர்களின் பெயர்கூட அம்பலமாகிவிடாதா? அந்த இரு பெண்களுள் ஒருவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை போலீசார் மறைக்க முயன்று முடியாமல் போன பிறகும், தேசியவாதிகள் இக்கேள்வியை எழுப்ப மறுத்து வருகிறார்கள். மாறாக, இக்கமிசன் புதிய ஆதாரங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறி, இந்த இடைக்கால அறிக்கையை ஒதுக்கித் தள்ளுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அப்பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்திக் கொலை செய்த பெரிய மனிதர்களே ‘மனசாட்சிக்குப் பயந்து’ குற்றத்தை ஒப்புக்கொண்டால்கூட, “அதற்கும் ஆதாரம் ஏதாவது வைத்திருக்கிறாயா?” என இவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்பட முடியாது!

-புதிய ஜனநாயகம், ஜூலை-2009

Monday, July 27, 2009

இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் விவகாரம் -காஷ்மீர்-சபாநாயகர் மீது மைக் வீசிய மெஹ்பூபா

Mehbooba Mufti
ஸ்ரீநகர்: காஷ்மீர் சட்டசபையில் சபாநாயகரை தாக்க முயன்றார் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான மெஹ்பூபா முப்தி.

முன்னாள் முதல்வர் முப்தி முகம்மத் சயீதின் மகளான இவர் எதிர்க் கட்சித் தலைவராக உள்ளார். இந் நிலையில் இன்று காஷ்மீர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது.

அப்போது மாநிலம் சோபியானில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் மீது சட்டசபையி்ல் மெஹ்பூபா ‌பிரச்சனை கிளப்பினார்.

அப்போது சபாநாயகர் முகம்மத் லோனுக்கும், மெஹபூபாவுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

அப்போது ஆவேசமான மெஹ்பூபா சபாநாயகரை நோக்கிச் சென்று அவரது மேஜையில் இருந்த மைக்கைப் பிடுங்கி அவர் மீது வீசினார். ஆனால், அது அவர் மீது படவில்லை.

இதையடுத்து அவைக் காவலர்கள் ஓடிவந்து மெஹ்பூபாவை வெளியே இழுத்துச் சென்றனர். இச் சம்பவத்தால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு சபை இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.