Thursday, November 12, 2009
வெடிபொருள்கள் பறிமுதல்; முன்னாள் இராணுவ வீரர் கைது!
உத்திரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தின் லால்கஞ்ச் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் முன்னாள் இராணுவ வீரர் ஆவார். ஷ்யாம் சுந்தர் பட்டேல் என்ற அந்த இராணுவ வீரரும் ராம்ஜி பட்டேல் என்பவரும் மத்தியப் பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களிடமிருந்து சுமார் 4,000 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 4,000 எலெக்ட்ரானிக் டெடனேட்டர் ஆகியவை மிர்சாபூர் மாவட்டத்தில கைப்பற்றப்பட்டன. இந்தப் பொருள்கள் 9 சாக்குப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் தகவல்கள் கூறுகின்றன.
Tuesday, September 22, 2009
கோஷ்டிச் சண்டை முற்றுகிறது! பா.ஜ.க. கனவு நொறுங்குகிறது!
ஒழுங்கும் கட்டுப்பாடும் கொள்கைபிடிப்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த கட்சி என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியில், இன்று கோஷ்டிச் சண்டைகள் புழுத்து நாறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைப் பரிசீலிக்கத் தொடங்கியதிலிருந்தே அக்கட்சிக்குள் கோஷ்டிச் சண்டைகளால் அடுத்தடுத்து பூகம்பம் வெடித்துக் கொண்டிருக்கிறது.
எவ்வளவுதான் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினாலும்,பொய்யான நம்பிக்கைகளை ஊட்டினாலும் தீவிரமாகிவிட்ட கோஷ்டிச் சண்டைகளால் அக்கட்சி பலவீனமடைவதைத் தடுக்கவே முடியாது என்கிற நிலைமை நெருங்கிவிட்டது.
பா.ஜ.க.வின் தேர்தல் தோல்விக்குப் பழிபோடப்பட்டு உத்தர்கண்ட் முதல்வர் கந்தூரி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அருண் ஜேட்லிக்கு நாடாளுமன்ற மேலவையின் பா.ஜ.க. தலைவர் பதவியும், சுஷ்மா சுவராஜுக்கு நாடாளுமன்ற பா.ஜ.க. துணைத் தலைவர் பதவியும் தரக்கூடாது என்று யஷ்வந்த் சின்ஹா,அருண் ஷோரி, ஐஸ்வந்த் சிங் முதலான பழம் பெருச்சாளிகளின் அதிருப்தி கோஷ்ட ிகலகக்கொடி தூக்கியது. அதன் பிறகு, ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று, எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு வசுந்தராராஜே சிந்தியாவுக்கு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். இதை ஏற்கமறுத்து வசுந்தரா கோஷ்டி வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கியது.
இந்நிலையில், பாகிஸ்தானின் தேசத் தந்தையாகச் சித்தரிக்கப்படும் முகமது அலிஜின்னாவைப் புகழ்ந்து புத்தகம் எழுதியதை வைத்து, பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் அதிரடியாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகிய இதர மூத்ததலைவர்கள் ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதற்கிடையே, 1999ஆம் ஆண்டு இந்திய விமானம் ஆப்கானிஸ்தானிலுள்ள கந்தகாருக்குக் கடத்தப்பட்டு, பயணிகள் மீட்கப்பட்ட விவகாரத்தில், உண்மையில் என்ன நடந்தது என்பதை அத்வானி மறைக்கிறார் என்று வாஜ்பாயியின் வலதுகரமான முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா பேட்டியளித்தார். முதலில் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராகக் கிளம்பிய அதிருப்தியாளர்களின் கலகம், இப்போது அத்வானிக்கு எதிராகத் திரும்பியுள்ளது. அத்வானி ஒரு புளுகுணி என்று வெளிப்படையாகக் கேலி செய்தும், அவர் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்ததால் தான் உட்கட்சிப் பூசல் பெருகியதாகவும் அதிருப்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் தோல்வியால் சோர்வடைந்துள்ள கட்சி அணிகளிடம் புது நம்பிக்கையூட்ட செப்டம்பரில் நாடு முழுவதும் ரதயாத்திரை நடத்தப் போவதாக அறிவித்த அத்வானி, தீவிரமாகிவிட்ட உட்கட்சிப் பூசலால் அத்திட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.
இந்துவெறி பாசிச பயங்கரவாதத் தலைமையகமான ஆர்.எஸ்.எஸ். வேறு; அரசியல் கட்சியான பா.ஜ.க.வேறு என்று ஆடிய நாடகமெல்லாம் முடிவுக்கு வந்து, இப்போது ஆர்.எஸ்.எஸ்.வெளிப்படையாகவே பா.ஜ.க. கோஷ்டிச் சண்டையில் தலையிட்டு சமரசப்படுத்தக் கிளம்பியுள்ளது. பா.ஜ.க.வின் உயிர்நாடியே ஆர்.எஸ்.எஸ்.இடம் இருப்பதால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நடத்திய கட்டப்பஞ்சாயத்தின்படி, அத்வானி எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள, அப்பொறுப்பில் சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்படுவார் என்றும்; இவ்வாண்டின் இறுதியில் பா.ஜ.க. தலைவர் பதவிக் காலம் முடிந்து ராஜ்நாத் சிங் விலகியபின், அருண்ஜேட்லி அப்பொறுப்பை ஏற்பார் என்றும் செய்திகள் வந்துள்ளன. இச்சமரசத் தீர்வை இந்துவெறிபாசிசத் தலைமையகத்தின் முடிவை ஏற்று கட்டுப்பாட்டுடன் நடப்பதாக பா.ஜ.க.தலைவர்கள் பசப்பலாம்; ஆனால், பதவிக்கும் அதிகாரத்துக்குமான கோஷ்டிச்சண்டை அக்கட்சிக்குள் ஓயப்போவதில்லை. அத்வானியின் பிரதமர் நாற்காலிக் கனவும் நனவாகப் போவதில்லை.
பாரதிய ஜனதா கட்சி தேர்தல் தோல்விகளாலும், உட்கட்சிப் பூசல்களாலும் பலவீனப்பட்டுக் கிடக்கும் நிலையில், அக்கட்சியை அரசியல் அரங்கிலிருந்தே விரட்டியடிக்க இதுவே சரியான, பொருத்தமான தருணம். இந்துவெறி பாசிசத்தை சித்தாந்தமாகக் கொண்டுள்ள அக்கட்சியின் நாட்டுவிரோத மக்கள்விரோத பொய்கள், சதிகள்,கொலைகள், துரோகங்கள் மற்றும் பாசிச பயங்கரவாத வெறியாட்டங்களை மக்களிடம் அம்பலப்படுத்தவும், பார்ப்பன இந்துவெறி பாசிசம் காலூன்றவே முடியாதபடிமுடமாக்கி அழிக்கவும் இதுவே சரியான தருணம்.
தேங்க்ஸ் டு : www.tamilcircle.net
Saturday, August 8, 2009
குஜராத்: 50000 முஸ்லீம்களுக்கு ஸ்காலர்ஷிப் மறுப்பு
இந்த சர்ச்சையால் முதல்வர் நரேந்திர மோடிக்கு புதுப் பிரச்சினை உருவாகியுள்ளது.
சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு ஸ்காலர்ஷிப் உதவியை வழங்குகிறது. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த ஏழை, மாணவ, மாணவியர் பள்ளிப் படிப்பை முடிப்பதற்காக இந்த உதவி செய்யப்படுகிறது.
இந்த ஸ்காலர்ஷிப் தொகையில், 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் இப்படித்தான் உள்ளது. ஆனால் குஜராத்தில் மட்டும், 25 சதவீத பங்கை ஏற்க முடியாது என்று மோடி அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இங்கு மட்டும் ஸ்காலர்ஷிப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை முஸ்லீம் சமுதாய மாணவர்களுக்கு மட்டும் ஆண்டு தோறும் ரூ. 22 லட்சம் உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் குஜராத்துக்கு மட்டும் ரூ. 57 ஆயிரத்திற்கும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் அல்லது அதற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லீம் மாணவர் அல்லது மாணவி இந்த ஸ்காலர்ஷிப் பெறத் தகுதி படைத்தவர் ஆவார். அழருக்கு ரூ. 800 முதல் ரூ. 1500 வரை ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.
கடந்த ஆண்டு இந்த ஸ்காலர்ஷிப்பை எதிர்த்து மத்திய அரசுக்கு மோடி அரசு ஒரு கடிதம் எழுதியது. அதில் இப்படி இனம் பார்த்து நிதியுதவி செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறப்பட்டிருந்தது. மேலும் கடந்த ஆண்டு மத்திய அரசின் இந்த ஸ்காலர்ஷிப் உதவியை யாருக்கும் தராமல் விட்டு விட்டது குஜராத் அரசு.
இந்த ஆண்டும் இதுவரை ஸ்காலர்ஷிப் உதவியை யாருக்கும் வழங்கவில்லை மோடி அரசு. இதனால் முஸ்லீம் ஏழை, மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் உதவி கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மோடி அரசின் செயல் அரசியல் சட்டவிரோதமானது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இது பிரதமரின் 15 அம்சத் திட்டங்களில் ஒன்று. சிறுபான்மையினர் மேம்பாட்டை கருத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம். அனைத்து மாநிலங்களும் இதை ஏற்றுள்ளபோது, குஜராத் மட்டும் எதிர்ப்பது நியாயமல்ல என்றார்.
Wednesday, June 10, 2009
குஜராத் இனப்படுகொலை: பாதிக்கிணறு தாண்டும் நீதிமன்றத் தீர்ப்புகள்!
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் இனப் படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தாலும் குஜராத் உயர்நீதி மன்றத்தாலும் சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள மூன்று தீர்ப்புகள் இந்து மதவெறி கும்பலுக்கு, குறிப்பாக அப்படுகொலையை நடத்திய நாயகன் மோடிக்கு எதிராக அமைந்திருப்பதோடு, இந்த இனப்படுகொலை தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திவரும் பொய்ப் பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.
கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் எஸ் 6 பெட்டி எரிந்து போனதை, பாகிஸ்தான் ஆதரவோடு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் என ஊதிப் பெருக்கி, அவ்வழக்கை காலாவதியாகிப்போன பொடா சட்டத்தின் கீழ் நடத்தி வந்தது, குஜராத் அரசு. “இச்சம்பவத்தைத் தீவிரவாதத் தாக்குதலாகக் கருத முடியாது; எனவே, இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களை பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது” என குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கோத்ரா சம்பவம் தொடர்பான தனது பித்தலாட்டங்களை எப்படியாவது நிரூபித்து விட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் மோடி அரசு, தனது கைக்கூலிகளைத் தூண்டிவிட்டு இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையைப் பெற்றுவிட்டது.
கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் எஸ்6 பெட்டி எரிந்துபோன வழக்கு மற்றும் அகமதாபாத்திலுள்ள நரோடா பாட்டியா, நரோடா கிராமம், குல்பர்க் சொசைட்டி ஆகிய முசுலீம் குடியிருப்புகளில் இந்து மதவெறிக் கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 10 வழக்குகளை விசாரிக்க ஆறு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்; இவ்வழக்கு விசாரணையை உச்சநீதி மன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு கண்காணித்து, மூன்று மாதத்திற்கு ஒருமுறை விசாரணை தொடர்பான அறிக்கையை உச்சநீதி மன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, உச்சநீதி மன்றம்.
இந்து மதவெறிக் கும்பல் நடத்திய தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளில் ஏறத்தாழ 2,000 வழக்குகளைப் போதிய சாட்சியம் இல்லை என்று கூறி, கலவரம் நடந்து முடிந்த கையோடு கைகழுவி விட்டது, மோடி அரசு. இந்த 2,000 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதி மன்றம், இந்தக் குறிப்பிட்ட 10 வழக்குகளைத் தனது கண்காணிப்பின் கீழ் எடுத்துக் கொண்டுள்ளது.
இந்து மதவெறிக் கும்பல் குல்பர்க் சொசைட்டி குடியிருப்பைத் தாக்கியபொழுது மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்ஸான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, இந்த இனப்படுகொலையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்குள்ள தொடர்பை விசாரிக்கக் கோரி நடத்தி வந்த வழக்கில், “சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் இனப் படுகொலையில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்குள்ள தொடர்பை மூன்று மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை தர வேண்டும்” என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஜாகியா ஜாப்ரியின் இவ்வழக்கை குஜராத் உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்து ஏற்கெனவே தள்ளுபடி செய்து விட்டது என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இத்தீர்ப்புகள் வரவேற்கப்படத் தக்கவைதான் என்றபோதும், உச்சநீதி மன்றம்கூட குஜராத் முசுலீம் இனப் படுகொலை தொடர்பான வழக்குகளை பத்தோடு பதினொன்றாகத்தான் நடத்தி வருகிறது என்பதையும் இங்கு அழுத்தமாகச் சொல்லித்தான் தீர வேண்டும்.
இந்த இனப்படுகொலை நடந்து முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த இனப்படுகொலையின்பொழுது உயிர் தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கான முசுலீம் குடும்பங்கள் இன்றும்கூட தாங்கள் வாழ்ந்து வந்த பகுதிகளுக்குள் கிராமங்களுக்குள் நுழைய முடியாமல் அகதிகளாக வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். இந்த இனப்படுகொலை தொடர்பாகப் பதியப்பட்ட 2,000 வழக்குகளில் வெறும் 2 வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்; மீதி வழக்குகள் அனைத்தும் நீதிமன்ற விசாரணை என்ற நிலையிலேயே ஊறப்போட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு வழக்குகளிலும்கூட நீதிமன்றம் தன்முனைப்போடு செயல்பட்டுக் குற்றவாளிகளைத் தண்டித்துவிடவில்லை. மோடி கும்பல் நடத்திய தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு போன்ற அப்பாவி முசுலீம்களும் மனித உரிமை அமைப்புகளும் நடத்திய பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.
இந்த இனப்படுகொலையைத் தலைமையேற்று நடத்திய நரேந்திர மோடியையும், அவரது தளபதிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்ட இந்து மதவெறி பாசிசக் குண்டர்கள் அனைவரையும், யூத இனப்படுகொலையை நடத்திய பாசிச நாஜிக் கும்பலைத் தண்டித்ததைப் போல, தனி விசாரணை மன்றம் அமைத்து, தனிச் சட்டம் இயற்றி இந்நேரம் தண்டித்திருக்க வேண்டும். முசுலீம் தீவிரவாதிகள் கடந்த நவம்பரில் மும்பய் நகர் மீது தாக்குதல் நடத்தியவுடனேயே, இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்த இந்திய அரசு, மோடி போன்ற இந்து மதவெறி தீவிரவாதிகளை எதிர்கொள்ள தனிச் சட்டம் இயற்ற மறுத்து வருகிறது. இந்த இனப்படுகொலை தொடர்பான 2,000 வழக்குகளில் வெறும் 10 வழக்குகளை மட்டும் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள உச்சநீதி மன்றம், இந்தப் பத்து வழக்குகளை வெளி மாநில நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தனது தீர்ப்பில் உதறித் தள்ளி விட்டது.
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள விரைவு நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணையைக் கண்காணித்து உச்சநீதி மன்றத்திற்கு அறிக்கை அனுப்புவது; இந்தப் பத்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள கட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பது; சிறப்புப் புலனாய்வுக் குழுவோடு கலந்தாலோசித்து, அரசு வழக்குரைஞர்களை நியமிப்பது ஆகிய பொறுப்புகள் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்து வழக்குகளும் இந்து மதவெறிக் கும்பலின் அச்சுறுத்தலின்றி நடைபெறும் என நம்பச் சொல்கிறது, உச்சநீதி மன்றம்.
2,000 வழக்குகளில் இந்தப் பத்து வழக்குகளில் மட்டும் விரைவாகவும் நியாயமாகவும் நீதி கிடைத்துவிட்டால் போதும் என்று இருந்துவிட முடியாது; இரண்டாவதாக, இந்து மதவெறிக் கும்பல் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்துகொண்டு இந்த பத்து வழக்குகளையும் இழுத்தடிக்கும் நரித்தனத்தில் இறங்காது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.
குஜராத் அரசில் மகளிர் நலத் துறையில் இணை அமைச்சராக இருந்த மாயாபென் கோத்நானியும், விசுவ இந்து பரிசத்தின் பொதுச் செயலாளராக இருந்த ஜெய்தீப் படேலும்தான், நரோடா பாட்டியாவிலும், நரோடா கிராமத்திலும் நடந்த தாக்குதல்களுக்குத் தளபதிகளாகச் செயல்பட்டவர்கள். இவர்கள் இருவரும் கைபேசிகள் மூலம் கொடுத்த உத்தரவுகளின்படிதான் இந்து மதவெறிக் கும்பல் அந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தபொழுதும், இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டதோடு, நரோடா பாட்டியா மற்றும் நரோடா கிராம கொலைச் சம்பவ வழக்குகளைப் போதிய சாட்சியமில்லை என்ற பொய்யைச் சொல்லிக் கைகழுவி விட்டது, மோடி அரசு.
உச்சநீதி மன்ற உத்தரவுப்படி இந்த இரண்டு வழக்குகளையும் மீண்டும் புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழு, அமைச்சர் மாயாபென்னையும், ஜெய்தீப் படேலையும் விசாரணைக்கு அழைத்தது. அவர்கள் இருவருமே மோடிக்குள்ள அதிகாரத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு, விசாரணைக்குப் போகாமல் காலத்தைக் கடத்தினர். இதனையடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அவர்கள் இருவரையும் தலைமறைவாகத் திரியும் குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்களோ குஜராத்திலுள்ள கீழ் நீதிமன்றமொன்றில் மனுப் போட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழு தங்களைக் கைது செய்துவிடாத வண்ணம் பிணை வாங்கிக் கொண்டனர். அந்த நீதிமன்றம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் இவர்கள் சாட்சியத்தைக் கலைத்துவிட மாட்டார்கள் என இக்கிரிமினல்களுக்குச் சான்றிதழ் அளித்தது. இதன்பின், சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் உயர்நீதி மன்றத்தை அணுகி கீழ் நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்ய வைத்து, அதன் பிறகு அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. எனினும், கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவ்விருவருக்கும் பிணை வழங்கி விட்டது, குஜராத் நீதிமன்றம்.
இப்படிப்பட்ட இழுத்தடிப்புகளை இந்து மதவெறிக் கும்பல் மட்டுமல்ல, உச்சநீதி மன்றம்கூட “சட்டப்படி” செய்து வருகிறது என்பதும் உண்மை.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வசமுள்ள இந்தப் பத்து வழக்குகளையும் குஜராத்திற்கு வெளியே விசாரிக்க வேண்டும் எனக் கோரி மனித உரிமை அமைப்புகள் 2003ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம் இந்த வழக்குகளின் மீது குஜராத் நீதிமன்றங்களில் நடந்துவந்த விசாரணைகளுக்கு இடைக்கால தடை விதித்தது. மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட உச்சநீதி மன்றம், இந்த பத்து வழக்குகளை குஜராத்திலேயே விரைவு நீதிமன்றங்களை அமைத்து விசாரிக்கலாம் என இப்பொழுது தீர்ப்பளித்திருக்கிறது. இந்த “பரபரப்பான” தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்குவதற்குள் ஏறத்தாழ ஆறு ஆண்டு காலம் உருண்டோடிவிட்டது. இந்து மதவெறியன் வருண் காந்தி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கை கைசொடுக்கும் நேரத்திற்குள் தள்ளுபடி செய்துவிட்ட உச்சநீதி மன்றம், இந்தப் பஞ்சு மிட்டாய் தீர்ப்பை வழங்குவதற்கு இத்துணை காலதாமதம் ஏன் செய்தது? இப்படி இழுத்தடிப்பதில் நீதிபதிகளுக்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா? என்ற கேள்விகளை எழுப்பினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நம் மீது பாய்ந்து விடும்.
சபர்மதி விரைவுவண்டி கோத்ரா ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற ஒருசில நிமிடங்களிலேயே, அவ்வண்டியின் எஸ்6 பெட்டி தீக்கிரையானது. இது தொடர்பாக கோத்ராவைச் சேர்ந்த 135 முசுலீம்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களுள் 22 பேர் தலைமறைவாகிவிட 100 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 100 பேரில் 16 பேருக்கு மட்டும் பிப்ரவரி 14, 2003 அன்று குஜராத் உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. இந்தத் தீர்ப்பு வந்த மறுநிமிடமே, அதுவரை சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை பாசிச பொடா சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார், மோடி. இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எளிதாகப் பிணை கிடைத்துவிடக் கூடாது என்ற ‘நல்லெண்ணம்’தான் இதற்குக் காரணம்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கடந்த ஐந்தாண்டுகளாக முறையாக விசாரிக்கப்படாமல் உச்சநீதி மன்றத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சபர்மதி விரைவுவண்டியின் எஸ்6 பெட்டி தீக்கிரையான வழக்கு பொடாவின் கீழ் வராது என குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பாகவே, மைய அரசால் அமைக்கப்பட்ட பொடா மறு ஆய்வுக் கமிட்டி 2004ஆம் ஆண்டிலேயே இப்படியான தீர்ப்பை அளித்துவிட்டது. பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் உரிமை உண்டு என 2006ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தும், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிறையில் வாடி வரும் 84 முசுலீம்களுக்குப் பிணை வழங்கும் மனுவை முறையாக விசாரிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறது, உச்சநீதி மன்றம்.
உச்சநீதி மன்றத்தின் இந்த அநீதியான மற்றும் பாரபட்சமான போக்கை வெட்கக்கேடு என விமர்சித்தார், மனித உரிமைப் போராளியும் வழக்குரைஞருமான தீஸ்தா சேதல்வாட். உச்சநீதி மன்றத்தின் முதல் “தலித்” தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன் இந்த அநீதிக்காக வெட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரோ, தீஸ்தா சேதல்வாட் உச்சநீதி மன்றத்தின் பாரபட்சமான சிவப்பு நாடாத்தனத்தை அம்பலப்படுத்தியதற்காக ஆத்திரமடைந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி 84 முசுலீம்களின் பிணை மனு விசாரணைக்கு வந்தபொழுது, “யார் இந்த தீஸ்தா சேதல்வாத்? உங்களில் யாராவது எந்த வகையிலாவது அவருடன் தொடர்புடையவர்களா? அவருடன் தொடர்புடைய யாராவது பிணை மனு தாக்கல் செய்திருந்தால், அதனை இந்த அமர்வு நீதிமன்றம் கேட்க விரும்பவில்லை” எனக் கீழ்த்தரமான முறையில் மனுதாரர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.
குஜராத் இனப் படுகொலையின்பொழுது நடந்த கொடூரங்களை வெளிக் கொண்டு வந்ததிலும், பெஸ்ட் பேக்கரி மற்றும் பில்கிஸ் பானு தொடர்பான வழக்குகளில் இந்து மதவெறிக் கிரிமினல்கள் தண்டிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் பங்கு அளப்பரியது எனத் தெரிந்திருந்தும், “யார் இந்த தீஸ்தா?” என உச்சநீதி மன்றம் வினவியது, அம்மன்றத்தின் அதிகாரத்திமிரைத்தான் வெட்ட வெளிச்சமாக்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்பதை விட, தனது அதிகாரத் திமிரையும் பாரபட்சமான, தன்னிச்சையான போக்கையும் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதில்தான் உச்சநீதி மன்றம் குறியாக இருந்து வருகிறது.
மனுதாரர்கள் தங்களுக்குப் பிணை கிடைக்க வேண்டும் என்ற பதைபதைப்பில், உச்சநீதி மன்றத்தின் மிரட்டலுக்கு அடிபணிந்து, தீஸ்தாவுடன் தொடர்பு வைத்துக் கொள்வதைக் கைவிடுவதாக அறிவித்தனர். எனினும், உச்சநீதி மன்ற நீதிபதிகள் அவர்களுக்குப் பிணை வழங்காமல், விசாரணையை ஒத்திவைத்து, அம்முசுலீம்களின் வாழ்க்கையோடு விளையாடிப் பார்த்து மகிழ்ந்தனர். இந்தக் குரூரத்தை யாரால்தான் சகித்துக் கொள்ள முடியும்? தனது அரசால் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களுக்கு நீதி மட்டுமல்ல, பிணைகூடக் கிடைத்துவிடக் கூடாது என விரும்புகிறார், மோடி. மோடியைப் போலவே நீதிபதிகளும் எண்ணுகிறார்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?
‘‘தாமதமாக வழங்கப்படும் நீதி, நீதி மறுக்கப்படுவதற்குச் சமமானது” என்ற பொன்மொழியை உச்சரித்துக் கொண்டே, குஜராத் முசுலீம்களுக்கு ‘நீதி’ வழங்குவதை இழுத்தடிக்கும் திருப்பணியை இந்திய நீதிமன்றங்கள் சட்டப்படியே செய்து வருகின்றன. சில சமயங்களில் குஜராத் முசுலீம்களுக்குச் சாதகமாக வழங்கப்படும் தீர்ப்புகள்கூட, அவர்களுக்கு முழுமையான நியாயத்தை வழங்கிவிடுவதில்லை. பில்கிஸ் பானு வழக்கில் (பார்க்க; புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2008) பாலியல் வன்முறை தாக்குதலையும், படுபாதக கொலைகளையும் நடத்திய இந்து மதவெறி கிரிமனல்களுள் ஒருவனுக்குக்கூடத் தூக்குத் தண்டனை தரப்படவில்லை. இக்கிரிமினல் குற்றங்களை மூடிமறைக்கத் துணையாக நின்ற போலீசு அதிகாரிகள், அரசு மருத்துவர்களில் ஒருவருக்குக்கூட ஒருநாள் சிறை தண்டனைகூட வழங்கப்படவில்லை.
இச்சூழ்நிலையில், இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்புகளில் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தும் அதேசமயம், இந்த இனப்படுகொலையின் நாயகன் மோடி தண்டிக்கப்படும் வரையிலும், ஒவ்வொரு வழக்கிலும் விரைவாகவும், நியாயமாகவும் தீர்ப்பு வழங்கப்படும் வரையிலும் போராடுவது ஒன்றுதான் மதச்சார்பின்மையை நேசிக்கும் இந்திய மக்களின் முன் உள்ள ஒரே வழியாகும்.
கட்டுரையாளர்: செல்வம்
புதிய ஜனநாயகம், ஜூன்'2009,
Wednesday, January 21, 2009
மாலேகான்: முக்கிய தீவிரவாதி லெப்டினென்ட் கர்னல் புரோஹித்!
தீவிரவாதிலெப்டினென்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் தான் என்று குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கையை நேற்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர். இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் நோக்குடன் இந்த செயலில் அனைவரும் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மாலேகான் நகரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை ஹேமந்த் கர்கரே தலைமையிலான மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர்.
வழக்கு முக்கிய கட்டத்தை நெருங்கிய நிலையில் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி கர்கரே உயிரிழந்தார். இருப்பினும் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து தொய்வின்றி விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையி்ல் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குண்டுகளை சப்ளை செய்த தீவிரவாதி புரோஹித்...
மாலேகான் சதிச் செயலுக்கு முக்கிய காரணகர்த்தாவாக லெப்டினன்ட் கர்னல் தீவிரவாதி புரோஹித் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இவர்தான் வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆட்களை ஏற்பாடு செய்த தீவிரவாதி பிரக்யா...
அதேபோல பெண் தீவிரவாதி பிரக்யா சிங் தாக்கூர், வெடிகுண்டுகளை வைக்க ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 4000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், மகாராஷ்டிர ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
குற்றப் பத்திரிக்கையின் முக்கிய அம்சங்கள்...
கடந்த 2007ம் ஆண்டு அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பை தொடங்கினார் புரோஹித். இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவது, இந்துக்களுக்கான சட்டத்தை உருவாக்குவது, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது ஆகியவைதான் இந்த அமைப்பின் நோக்கம்.
தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு வழிகளில் நிதி திரட்டினார் புரோஹித். ரூ. 21 லட்சம் வரை இவ்வாறு அவர் திரட்டினார். இந்தப் பணத்தை அமைப்பின் பொருளாளர் தீவிரவாதி அஜய் ரஹீர்கர், குற்றம் சாட்டப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் படி கேட்டுக் கொண்டார்.
மாலேகான் குண்டுவெடிப்புக்கான சதித் திட்டம் தொடர்பான கூட்டங்கள் 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொடங்கின. பரீதாபாத், போபால், கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், நாசிக் ஆகிய இடங்களில் கூட்டம் போட்டு ஆலோசித்துள்ளனர்.
காஷ்மீரில் பணியில் இருந்த தீவிரவாதி புரோஹித் அங்கிருந்து திரும்பியபோது ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளை கொண்டு வந்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் தீவிரவாதி ராம்ஜி கலஸங்கரா, தீவிரவாதி சந்தீப் டாங்கே,
தீவிரவாதி பிரவீன் முத்தலீக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். வெடிகுண்டுகளை இவர்கள்தான் வைத்துள்ளனர் என்று குறப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர கூடுதல் டிஜிபி ரகுவன்ஷி கூறுகையில்,தீவிரவாதி புரோஹித்தான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸை கொடுத்தார்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும்போது விசாரிக்கப்பட்ட ஒரு சாட்சி, தீவிரவாதி புரோஹித்தான் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸைக் கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார்.
சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிரவாதி புரோஹித்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என அந்த நாடு கோரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸாரின் இந்த கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.
Thursday, January 8, 2009
பாஜக தலைமையகத்தில் திருட்டுப்போன கோடிகள் தீவிரவாதிகளுடையதா? தொடரும் சந்தேகங்கள்

தமிழ்மாறன்
அரசியல் கட்சிகள் நடத்துவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. அதிலும் அகில இந்திய கட்சிகள் நடத்துவது என்பது கத்திமேல் நடப்பது போல் கந்தகக் கிடங்குகளில் உலவச் செல் வதைப் போல கடினமான ஒன்றுதான். எவ்வளவு பணத்தைக் கொட்டினாலும் போடு போடு என வயிறு நிறையாமல் கத்தி மிரட்டும் ராட்சத யானை அது. காங்கிரஸ் கட்சி துவக்க காலத்தில் பல்வேறு தியாகங்களை நிதி ஆதாரங் களைப் பெருக்கும் விஷயத்திற்காக காங்கிரஸ் செய்ய வேண்டியிருந்தது. காந்தி, ஆஸாத், நேதாஜி போன்றோரின் தியாகம் அளவிட முடியாதவை. ஜவஹர் லால் நேரு தனது அலகாபாத் ஆனந்த பவனத்தையே கட்சிக்காக விற்றுத் தீர வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று காங்கிரஸ் அதிக காலம் இந்தியாவை ஆட்சி செய்த ஒரே ஆளும் கட்சி என்கிற விதத்திலும் அது செழிப்புடன் கொழிப் புடன் காட்சி அளிக்கலாம்.
இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சி செலுத்தும் இடதுசாரிகளின் நிலை இன்றும் வீதிக்கு வீதி உண்டியல் குலுக்கும் நிலையிலேயே உள்ளது. நிதி என்ற இரட்டை மிரட்டல் வார்த்தையைக் கண்டு அஞ்சியே இன்று எத்தனையோ அதிரடி முடிவுகளை எடுக்க முடியாமல் அடக்கி வாசிக்கின்றன.
ஆனால் பாஜக என்ற பழமைவாத, மதவாத, பிரிவினைவாத பாசிச கட்சிக்கு பணம் ஒரு பிரச்சினையாக என்றுமே இருந்ததில்லை. ஏனெனில் அவர்கள் இரண்டு எம்பிக்கள் கூட பெறாத கால கட்டங்களில் கூட தனி விமானங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்காக பரந்த இந்திய தேசம் முழுவதும் பறந்தார்கள்.
பாஜகவின் தலைவர்கள் என்றாலே கட்டுக்கட்டாக பணம் வாங்கிய வீடியோ காட்சிகள் உங்களுக்கு நினைவு வராமல் போகாது.
எந்த அளவுக்கு அவர்கள் கீர்த்தி நிறைந்தவர்கள் (!) என்றால் ராணுவத்தி னருக்கான சவப்பெட்டிகள் விஷயத்தில் கூட கேவலமான முறையில் முறைகேடு களை நிகழ்த்தினார்கள். ஆட்சியில் இருந்தால்தான் இந்த லட்சணம். ஆட்சியில் இல்லாவிட்டால் வாலை சுருட்டிக் கொண்டு தேமே என உட்காரு வார்கள் என சிலர் நினைக்கலாம். அந்த நினைப்பையும் கெடுப்பதைப் போன்ற ஒரு கண்றாவிக் காட்சி பாஜகவின் அகில இந்திய தலைமையகத்தில் அரங்கேறியுள்ளது.
கதவு எண் 11, அசோகா சாலை, புது டெல்லி என்பது பாஜகவின் அகில இந்திய தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் முகவரியாகும்.
இங்கு அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங்கின் பிரத்யேக அறைக்கு அடுத்தபடியாக ஒரு சிறிய மர்மமான அறை அமைந்திருக்கிறது. இது அலுவலகத்திலேயே மிகவும் முக்கியத்துவம் (!) வாய்ந்த அறை. ஆம் கட்சிக்காக வழங்கப்படும் பணத்தில் கணக்கு (!) காட்டியது போக மீதமுள்ள கரன்சிக் கட்டுகள் பதுக்கி வைக்கப்படும் அறை அதுவாகும்.
கடந்த மாதம் 26ஆம் தேதி அந்த அறையில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட பணம் தான், பாஜகவின ரால், பாஜகவுக்கு வழங்கப்பட்ட பணம், பாஜக அலுவலகத்தில் இருப்பவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை யடிக்கப்பட்ட பணம் இரண்டு கோடியே அறுபது லட்சம் எனக் குறிப்பிடப்பட் டாலும் நிஜமான தொகை இதை விட அதிகமாக இருக்கும் என்றே கருதப் படுகிறது.
திருடுபோனதோ மிகப்பெரிய தொகை. ஆனால் இதுகுறித்து முறை யான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வில்லை.
காவல்துறையினரிடம் புகார் கொடுத் திருக்க வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள்? மாறாக இவர்கள் தனியார் புலனாய்வு அமைப்பிடம் இது தொடர்பான விசாரணையை ஒப்படைத்துள்ளனர்.
வெளியுலகத்திற்கு தெரிய வேண் டாம் என்பதற்காக சில நிழல் உலக மனிதர்கள் செய்யும் வேலையை நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும், அடுத்தும் ஆட்சிக்கு வரப் போவது நாங்களே என எகிறிக் குதித்து எட்டாக்கனிக்கு ஏப்பம் விடுபவர்கள் செய்யலாமா? காவல்துறையினரை இன்னும் அணுகாதது ஏன்?
இந்திய நாட்டின் காவல்துறையின் மீது பாஜக தலைமைக்கு நம்பிக்கை இல்லையா?
திருட்டு போனது உண்மையில் இரண்டு கோடியே அறுபது லட்சம் தானா? அல்லது அதைவிட எத்தனை மடங்கு கோடிகள் திருட்டு போனது என்ற உண்மை அம்பலமாகி விடும் என்ற அச்சமா?
கோடானு கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுத்தது யார்? அவர் களைப் பற்றிய தகவல்களை பாஜக வெளியிடுமா?
கோடிகளைக் கொடுத்து தனிநபரா? குழுவா? குழுக்களா? குழுக்கள் என்றால் ஆயுதம் தாங்கிய குழுக்களா? அல்லது ஆயுதம் ஏந்துவதற்கு தூண்டும் குழுக்களா? மாலேகான் குண்டு வெடிப்புகளில் சிக்கிய தீவிரவாதி களுடன் பாஜகவின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் சகோதரர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் பாஜக தலைமையகத்தில் திருட்டு போனதாகக் கூறப்படும் கோடிக் கணக்கான ரூபாய்கள் குறித்த நியாய மான சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
பாஜக அலுவலகத்தில் திருட்டு போன பணம், பயங்கரவாதிகளிட மிருந்து வந்த பணமா? அல்லது திருட்டு சம்பவம் என்ற பெயரில் பயங்கரவாதி களுக்கு கொண்டு செல்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பணமா? என பல்வேறு திடுக்கிடும் சந்தேகங்களை பாஜகவைப் பற்றி நன்கு அறிந்தவர்களே தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசும் டெல்லி மாநில அரசும் அலட்சி யம் காட்டுவது ஏன்? விசாரணைக்கு உத்திரவிடுவதில் தாமதம் ஏன்?
Wednesday, December 31, 2008
'திருடப்போனவனுக்கு தேள்கொட்டிய கதை

தலைமை அலுவலகத்தில் ரூ.2.6 கோடி மாயம்
டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2.6 கோடி பணம் மாயமாகியுள்ளது. இது கட்சிக் கணக்கில் வராத, எந்த வழியில் வந்தது என்பதற்கு ரசீது இல்லாத பணம் ஆகும். இதனால் போலீசிடம் புகார் தர பாஜக தயக்கம் காட்டி வருகிறது.
டெல்லி அசோகா சாலையில் பாஜகவின் தலைமை அலுவலகம் உள்ளது. அங்குள்ள ஒரு அறையில் பணத்தை இருப்பு வைத்திருப்பது வழக்கம்.
அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 2.6 கோடி பணத்தைக் காணவில்லை என்று பாஜகவின் தலைமை காசாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமைதான் பணம் திருட்டுப் போனது தெரிய வந்தது. அதற்கு முதல் நாள் கிருஸ்துமஸ். அன்று அலுவலகம் திறக்கப்படவில்லை. அதை பயன்படுத்திக் கொண்டு யாரோ பணத்தை திருடிச் சென்றுள்ளதாக தெரிகிறது.
24ம் தேதிதான் அந்தப் பணம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. கட்சி நிர்வாகிகள் பலரும் தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையி்ல் பணம் திருட்டுப் போயுள்ளது பாஜக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பல வருடங்களாகவே நலின் தாண்டன் என்ற கட்சியின் மூத்த நிர்வாகிதான் பண விவகாரத்தை கையாண்டு வருகிறார். இவர்தான் தலைமைக் காசாளராகவும் இருக்கிறார். அவர்தான் பணம் திருட்டுப் போனதைக் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளார்.
பணம் வைக்கப்படும் அறைக்குப் போகும் அனுமதி பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். கட்சிக்காரர்கள் யாரேனும்தான் இதை செய்திருக்க முடியும் என சந்தேகிக்கப்படுகிறது. காரணம், அலுவலகத்தின் பூட்டுக்கள் எதுவும் உடைக்கப்படவில்லை. அதேசமயம், பணம் வைக்கப்பட்டிருந்த சிறிய அறையின் கதவு மூடப்படவில்லை.
இதற்கிடையே, இந்தப் பணத்தை இதுவரை கட்சிக் கணக்கில் சேர்க்கவில்லையாம். தேர்தலுக்காக இது வசூலிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எந்த வகையில் இந்தப் பணம் திரட்டப்பட்டது என்தற்கும் கட்சியிடம் ரசீது இல்லை. (இனிமேல் உருவாக்கினால் தான் உண்டு). கணக்கில் இல்லாத பணம் என்பதால் (கிட்டத்தட்ட பிளாக் மணி மாதிரி) போலீஸாரிடம் போக பாஜக தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.
தற்போது தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றை அமர்த்தி விசாரணை மேற்கொண்டுள்ளதாம் பாஜக தலைமை.
பணம் காணாமல் போனது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் எந்தத் தகவலும் தெரிவிக்க மறுக்கின்றனர். கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் இதுகுறித்து கேட்டபோது, கருத்து கூறுவதற்கில்லை என்று மறுத்து விட்டார்.
டெல்லி போலீஸார் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், நாங்களும் கேள்விப்பட்டோம். இருப்பினும் முறையான புகார் வராமல் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறுகின்றனர்.
தற்போது பாஜக தலைமை அமர்த்தியுள்ள துப்பறியும் நிறுவனம், தாண்டனை குறி வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அவருக்குத் தெரியாமல் பணம் திருட்டுப் போயிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
மேலும், கட்சித் தலைமை அலுவலகத்தில் தங்கியிருப்பவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. பணம் வைக்கப்படும் அறைக்குப் போக அனுமதி பெற்றவர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தாண்டன் பல வருடங்களாகவே காசாளராக இருந்து வருகிறார். இதை விட பெரிய தொகையை அவர் நிர்வகித்துள்ளார். எனவே அவரை சந்தேகப்படக் கூடாது என்று கட்சிக்குள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர் வாங்கும் சம்பளத்தை பார்த்தால், அவரிடம் இருக்கும் இன்னோவா காரும், அவரது ஆடம்பர வீடும், செலவுகளும் இடிக்கிறதே என்று அவர் மீது சந்தேகப்படுவோர் சுட்டிக் காட்டுகின்றனர்.
சமீபத்தில் கட்சியின் தலைமை அலுவலக ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போர்க்கொடி உயர்த்தினர். அதுதொடர்பாக தாண்டனுக்கும், அலுவலக செயலாளர் ஷியாம் ஜாஜுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையெல்லாம் மனதில் வைத்தே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Wednesday, December 10, 2008
இணையத்தில் ஆர்.எஸ்.எஸ்
அடித்து நொறுக்குவோம்!
Wednesday, December 3, 2008
வெடிகுண்டு சப்ளை செய்த தீவிரவாதி சாமியார் கைது
திருச்சி உறையூர் தொழில் அதிபர் பாலகிருஷ்ணன், புத்தூர் ஒட்டல் ஊழியர் கருணாகரன், உறையூர் ஜவுளி தொழில் அதிபர் ஆதிமூலம் ஆகியோரை கடந்த சில திங்களுக்கு முன்பு பிரபல ரவுடிகள் கண்ணாடி ஆனந்த், எடமலைப்பட்டி புதூர் பிரதாப், சறுக்குப்பாறை ஆனந்த், ஒத்தக்கை வினோத் ஆகியோர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது.
தகவல் அறிந்த போலீசார் துரித கதியில் செயல்பட்டு அந்த ரவுடிகளை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கண்களில் இருந்து தப்பிச் சென்ற மணச்சநல்லூர் குணாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ரவுடி கும்பல்களுக்கு வெடி குண்டு தயாரித்துக் கொடுத்த மணச்சநல்லூர் அண்ணாநகர் கீழ காமாட்சித் தெரு தீவிரவாதி சாமியர் அழுக்கு சித்தன் என்கின்ற சரவணனை திருச்சி கோட்டை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் ரவுடிகளுடன் ஏற்பட்ட தொடர்பு, வெடி குண்டு தயாரிப்பு பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Monday, December 1, 2008
அயோத்தி, கோயம்புத்தூர், குஜராத், ஒரிசா, மும்பை . . . சோதனைச்சாலைகள்Xகுண்டுவெடிப்புகள்

சாதாரணமாக மக்களிடம் ஒன்றும் தேசபக்தி பொத்துக்கொண்டு சாக்கடையில் ஓடுவதை போல ஓடவில்லை,தொலைகாட்சிகள்,வானொலிகள்,செய்திப்பத்திரிகைகள் அனைத்தும் மேலிருந்து இந்த உணர்ச்சிகளை இறக்குகிறார்கள்,தொடர்ச்சியாக சூடேற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஏனெனில் இதுவரை ஆங்காங்கே குண்டுகள் தான் வெடித்தன ஆனால் தற்போது நடந்திருப்பது இதுவரையிலும் இந்தியா காணத,இந்துமதவெறி பயங்கரவாத கும்பல் காணாத தாக்குதல் என்பதை விட போர் என்றே கூறலாம்.அதுவும் இந்தியத் தரகு முதலாளியின் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த ஹோட்டலின் மீதே போர் தொடுத்ததன் மூலம் இவர்களின் அமெரிக்க,பிரிட்டன் சொந்தங்கள் பீதியின் காரணமாக இன்னும் சில ஆண்டுகளுக்காவது இங்கு வரமுடியாமல் போகலாம் அதனால் உண்டான சோகம்,இனியும் பயங்கரவாதிகள்,பயங்கரவாதிகள் என்று கூறி அப்பாவி இசுலாமிய இளைஞர்களை நாய்களை போல வேட்டையாட முடியாது அவ்வாறு செய்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணியதால் ஏற்பட்ட பீதி தேசபகத வடிவில் வெளிப்பட்டிருக்கலாம். எந்த டாட்டாவும்,அம்பானியும் கொழுத்து சொத்து சேர்ப்பதை வைத்துக்கொண்டு இவர்கள் இந்த நாடு முன்னேறுகிறது,வல்லரசாகிறது என்று கதை சொல்லிக்கொண்டிருந்தார்களோ அந்த டாட்டாவின் ஹோட்டலின் மீதே நடத்தப்பட்ட தாக்குதலாலும் இந்த தாக்குதலின் எண்ணிப்பார்க்கவும் இயலாத திடீர் அதிர்ச்சியும் தான் இவர்களை தேசபக்த பஜனையை கோரசாக பாட வைக்கிறது.இதற்கு முன்பு இங்கே குண்டுகள் வெடிக்கவில்லையா ? அப்போதெல்லாம் இந்த ஊடகப்பொய்யர்களும்,ஆளும் கும்பலும் என்ன செய்தார்கள்? எல்லா குண்டு வெடிப்புகளின் போதும் வெறிக்கூச்சலிட்டு ஊரைக்கூட்டிய இவர்கள் செய்ததெல்லாம் என்ன? இந்தியாவில் ஒவ்வொரு முறை குண்டுகள் வெடித்த போதும் இவர்கள் பயங்கரவாத பீதியை மட்டும் தான் கிளப்பினார்கள்,அதுவும் ஒவ்வொரு முறையும் திட்டமிட்டு இசுலாமிய மக்களுக்கு எதிராக திருப்பிவிட்டு அவர்களை பயங்கரவாதிகளாக சமூகத்திற்கு அடையாளம் காட்டி ஒதுக்கித்தள்ளினார்கள்,
ஆனால் இப்போது அத்வானி கூட தனது வார்த்தைகளிலிருந்து விக்ஷத்தை கக்காததன் மர்மம் என்ன ? காங்கிரசு அரசை ஏன் முன்பைப் போல லாயக்கற்ற அரசு, நாட்டை பாதுகாக்க முடியாத அரசு என்று கடித்து குதறவில்லை அதுவும் இந்து ஓட்டை பொறுக்கத் நல்ல வாய்ப்பாக தேர்தல் நெருங்கும் தருணத்தில் கூட ஏன் பேசவில்லை ?ஏனென்றால் மேற்கூறியது மட்டும் தான் காரணமாக இருக்க முடியும், ஆனால் இதற்கு இவர்கள் சொல்லும் விளக்கமே வேறு அது தான் தேசபக்தி, நாடே அச்சுறுத்தலில் இருக்கும் போது காங்கிரசை விமர்சிப்பதா முக்கியம் இப்போது நாம் காட்ட வேண்டியது தேசபக்தியே என்று இந்த நாட்டை வல்லரசாக்க உழைக்கும் டாட்டாவின் இழப்பிற்காக நாமும் கண்ணீர் வடிக்க வேண்டும் என்கிறார்கள்,டாட்டாவை விடுங்க சாதாரண மக்கள் பலியாகியிருக்காங்களே என்று நீங்கள் கேட்கலாம், ஆம் உண்மை தான் ஆனால் அத்வானியோ இன்னபிற தேசபக்தர்களோ அவர்களுக்காக கண்ணீர் விடவில்லை என்பதை அடித்துச்சொல்லலாம் அவர்களுக்காக நாம் தான் உண்மையாக வருந்துகிறோம்.இதற்கு முன்னாலும் பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன அங்கேயும் மக்கள் நூற்றுக்கணக்கில் இறந்து போயிருக்கிறார்கள் ஆனால் எந்த இடத்தையும் இந்தளவிற்கு செண்டிமெண்ட் சீனாக்கி நட்டையே தேசபக்த சோகத்திற்குள் மூழ்கடிக்கவில்லையே ஏன்? அதற்கு இது மட்டுமே காரணமாக இருக்க முடியும்.ஆனால் இனி இதுபோல எண்ணிப்பார்க்கவியலாத வடிவங்களிலான தாக்குதல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்! இதில் ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை,ஆனால் அடிக்கும் இந்த புயல் காற்றிற்கான காரணத்தை மட்டும் அறிவார் யாருமில்லை,அறிய முற்படுவதுமில்லை,அல்லது நினைப்பது கூட இல்லை ஏனெனில் இந்து பயங்கரவாத கும்பல் வேறு பக்கம் பார்க்காத வண்ணம் பயங்கரவாதத்தை அடையாளப்படுத்தியுள்ளது

ஒரு பயங்கரம் அல்லது பயங்கரவாதம் உருவாக காரணம் இன்னொரு பயங்கரவாதமே என்பதை யாரும் மறுக்க முடியுமா? அதை யாரும் மறுக்க முடியாது. இல்லையென்றால் அகிம்சை தான் பயங்கரவாதத்தை உருவாக்குகிறதா?ஒரே வரியில் சொல்வதெனில் இசுலாமிய பயங்கரவாதத்தை உருவாக்கியது பார்ப்பன இந்து பயங்கரவாதம் தான். இந்து பயங்கரவாதத்தால் பழிவாங்கப்பட்டவர்களின் போர் தான் இசுலாமிய பயங்கரவாதம்.எனவே இசுலாமியர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்று பார்ப்பன பயங்கரவாத கும்பல் பிரச்சாரம் செய்கிறது, அந்த கண்ணோட்டம் என்பது பரவலாகவும் பரவியுள்ளது.அந்த பிரச்சாரத்திற்கு இரையாகாமல் தங்களுடைய சுயமான கண்ணோட்டத்துடன் இந்த பயங்கரவாதிகளையும் இவர்கள் தோற்றுவித்துள்ள எதிர் பயங்கரவாதத்தையும் அடையாளம் காணும் வரை இவை தொடரும் என்பதே முடிவு. இந்து மதவெறி பயங்கரவாதிகள் சமீபத்தில் தமது பயங்கரவாத செயலுக்காக பிடிபட்டுள்ளார்கள்.மாலேகானிலும் ,ஆமதாபாத்திலும்,சாம்ஜத் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் வெடித்த குண்டுகளை வைத்த பயங்கரவாதிகள் இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பல் என்பது அம்பலமாகியுள்ளதே ஆனால் இந்த குண்டு வெடிப்பு பற்றி தேசபக்தியுள்ள தேசீய ஊடக யோக்கியர்கள் ஏன் வாயை திறக்கவில்லை? இவர்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பது ஏன் ? அது பயங்கரவாத செயல் இல்லையா? இல்லை! ஏனென்றால் அது இந்து பயங்கரவாதிகள் வைத்த குண்டுகள் ! எனவே இந்த ஊடகங்கள் பற்றியும் இவர்களின் தேசபக்தி பற்றியும் நடு நிலையாளர்களே கேள்விகேளுங்கள்,அவர்களின் முகத்தின் முன் உள்ள திரையை விலக்கி பாருங்கள். அப்போது தான் உண்மை செய்திகளை அரிய முடியும். நீங்கள் உண்மை செய்திகளை அறியாத வரை உண்மையான,முதன்மையான பயங்கரவாதிகளை அடையாலம் கானாதவரை இந்த தாக்குதல்களை நாம் எதிர் நோக்கியிருக்கலாம். இந்த பயங்கரவாத செயல்கள் பற்றி எழுத்தாளர் அருந்ததி ராய் சில மாதங்களுக்கு முன்பு தெகல்கா வார ஏட்டுக்கு கொடுத்த நேர்காணலின் மொழியாக்கம் தற்போதைய சூழலின் அவசியம் கருதி இங்கே பதிவிடப்படுகிறது.இதன் மூலமும் இதே தளத்தில் இருக்கிறது.மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.

தெகல்கா : அதிகரித்துவரும் தீவிரவாத தாக்குதல்கள் எதனை குறிக்கின்றன ?காக்ஷ்மீர்,வடகிழக்கு மாநிலங்கள் அல்லது பஞ்சாப்பை போன்று குறிப்பான அரசியல் கோரிக்கைகளை ஒட்டிய வன்முறையாக இல்லாமல் இது தொடர்பின்றி நடைபெறுகிறதே, இந்தியாவில் என்ன மாற்றங்கள் நடைபெற்றுளது?
அருந்ததி ராய் : இது தெளிவாக உள்ளது, இது வெறுப்புணர்ச்சியினுடைய அறிக்கை. நாம் அனைவரும் இதை எதிர் கொண்டாக வேண்டும். சென்ற வாரம் பா.ஜ.க வெளியிட்டிருக்கும் அறிக்கை இந்த வெறுப்புணர்ச்சிக்கான துதிபாடல் [அதை மேலும் தீ விட்டு வளர்க்கும் எண்ணை - நாம்] காங்கிரசும் முன்பைப்போல தனது பிரித்தாளும் அரசியலை துவங்கியுள்ளது.இன்னும் சொல்லப்போனால் பா.ஜ.க வினுடைய விருப்பம் என்னவென்றால் இந்த வெறுப்புணர்ச்சியை மேலும் அதிகமாக,மிகுந்த வெறுப்புணர்ச்சியாக மாற்றிச்செல்ல விரும்புகிறது. இது போன்று மத மற்றும் சாதிய வாக்குகளை அறுவடை செய்வதென்பது தற்கால அரசியல் நடைமுறையின் ஓர் அங்கமே. கடந்த காலங்களில் மட்டுமல்ல நாம் இதற்கெதிராக எதையும் செய்யாத வரை இனி எதிர்காலங்களிலும் இந்நிலை தொடரும். நாம் இதற்கு அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. இது மையமான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சினையாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நிச்சயமாக மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை. இந்த விசயத்தில் நீதிமன்றங்களும்,போலீசும்,ஊடகங்களும் ஒருங்கினைந்து ஒன்று போல செயல்படுகிறார்கள்.
ஒவ்வொருவரும் இந்து மதச்சாயத்திற்குள் மூழ்கிக்கிடக்கின்றனர். ஜனநாயகத்தை பரவலாக்கும் ஒவ்வொரு நிறுவனமும் முற்றிலுமாக உடைந்து செயலற்று கிடக்கிறது. அனைவரும் தத்தமது சொந்த வழிகளில் பயணிக்கின்றனர். எனவே தான் மக்கள்[நீதி கிடைக்காத, நீதி மறுக்கப்பட்ட மக்கள் - நாம்] சட்டங்களை தமது கைகளில் ஏந்தத்துவங்கிவிட்டனர், சட்டத்தை மீறிய செயல்களில் துவங்கி தீவிரவாத தாக்குதகள் வரை செல்கின்றனர்.தெகல்கா : பயங்கரவாதத்தை மென்மையாக கையாள்வதா கடுமையான முறைகளில் கையாள்வதா என்கிற சர்ச்சை இப்பொழுது மையம் கொண்டுள்ளது. உண்மையில் இவையெல்லாம் தீர்வாகுமா ?
அருந்ததி ராய் : பொடா, தடா, சத்திஸ்கர் பாதுகாப்புச்சட்டம் என எந்த ஒரு சட்டமும் இதுவரை தீவிரவாதத்திற்கு முடிவு கட்டிவிடவில்லை. இந்த சட்டங்கள் எதையும் சாதித்ததாக சான்றுகளும் இல்லை, மாறாக இந்த சட்டங்கள் அனைத்தும் சமூகத்தின் இயல்பை மாற்றியமைப்பதற்கும் மேலும் ஜனநாயகத்தின் இடங்களை கிரிமினல்மயமாக்குவதற்கும், கேள்வி கேட்பவர்களின் வாயை அடைப்பதற்கும் மட்டுமே பயன்பட்டிருக்கிறது.
தெகல்கா : தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், செயற்கையாக உருவேற்றப்பட்ட இந்த அரசியல் சூழலில் இது போன்ற தாக்குதல்கள் நிகழ்கின்றனவே, இவற்றை எவ்வாறு பார்க்கிறீர்கள் ?அருந்ததி ராய் : நான் ஒரு நேர்கானலை கண்டு வியப்படைந்து போனேன், சமீபத்தில் தெகல்கா இதழுக்கு காங்கிரசு தலைவர் திக்விஜய் சிங் கொடுத்த பேட்டி தான் அது. முதன் முறையாக ஒரு முன்னணி அரசியல் தலைவர் சொல்கிறார் “தாக்குதல்களுக்கான நேரம் தெரிந்தும், இந்த தீவிரவாதிகள் யார் என்று எங்களுக்கு தெரியாது” கடைசியில் இதனால் லாபமடையப்போவது யார்?, தவறான நபர்கள் கைது செய்யப்படுவதும்,தேவையான ஆதாரங்கள் வழங்கிய பிறகும் யாருக்கும் உண்மையான குற்றவாளிகளை தெரிந்துகொள்ள விருப்பமில்லை, அல்லது தெரிந்தே அதை மூடி மறைக்கின்றனர். உதாரணத்திற்கு இந்திய முஜாகிதீன்களை எடுத்துக்கொள்ளுங்கள் தீவிரவாதக்குழுக்களில் இவர்கள் தான் முன்னணியானவர்களா அல்லது அரசுக்கு எதிரான பயங்கரவாதிகள் என்று அரசால் புனையப்பட்டவர்களா ? இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவெனில் இவையெல்லாம் திட்டமிட்டு உருவாக்கப்படுபவை, இதை கேட்டு நாம் ஆச்சர்யப்பட தேவையில்லை. நீங்கள் தொடர்ச்சியாக ஒரே செய்தியை வெளியிடுகிறீர்கள் அது சீக்கியர் பிரச்சினையாகவோ அல்லது இப்போது ஒரிசாவிலுள்ள கிறித்தவர்களின் பிரச்சினையாகவோ இருக்கட்டும், அனைத்திலும் மக்கள் நீதியையும், நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. இவை அனைத்தையும் விட அபாயகரமான விசயம் என்னவென்றால் பா.ஜ.க இதை வைத்து பெரும்பான்மை ஒட்டை கைபற்ற முயற்சிப்பதும், சிறுபான்மையினரை தீவிரவாதிகளாக்குவதும் தான். இந்தியாவில் மட்டும் தான் 200 மில்லியன் மக்களை சிறுபான்மையினர் என்ற கருதுகோள் உள்ளது. இந்த கண்ணோட்டம் நிச்சயமாக இந்த நாட்டையே இல்லாமல் அழித்து விடும். இது போன்ற கருத்துக்கள்,கண்ணோட்டம் இந்தியாவிற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகிற்கும் ஆபத்தானது.
நீங்கள் ஒட்டுமொத்த தலைமுறையையே,
வாழ வேறு வழியில்லை என்று உணரும்படியான நிலைக்கு தள்ளுகிறீர்கள், சிலர் மட்டும் வேண்டுமானால் இந்த கொடுமைகளையெல்லாம் தலையை தொங்கவிட்டுக்கொண்டு ஏற்கலாம் ஆனால் பெரும்பான்மையினர் அவ்வாறு கிடக்க மாட்டார்கள். தீவிரவாதத்தின் நோக்கம் அழிவாக ம்ட்டுமே உள்ளது. அது ஒன்றும் புரட்சிகரமான அரசியல் அல்ல. காக்ஷ்மீரிலுள்ள பாதுகாப்பு படையினரிடம் கேட்டுப்பாருங்கள்.அந்த சிறு பள்ளத்தாக்கை உங்கள் [அரசின்] கட்டுப்பாட்டிற்குள் வைக்க 5 லட்சம் பேர் தேவைப்படுகிறது.இதையே ஒட்டுமொத்த நாட்டிற்கும் செய்யபோகிறீர்களா ? ஆனால் இதை விட இன்னும் ஒரு படி மேலே போய் உடனடியாக தேர்தலில் நடக்கப்போவது, என்னுடைய கருத்துப்படி காங்கிரசு திறனற்று இன்னும் பலகீனமாகி பா.ஜ.க எடுத்தமுடிவுகளை தான் எடுக்கும். பா.ஜ.க வை பொறுத்தவரை தமது சொந்த நிலைப்பாடுகளின் படியே அவர்கள் தமது எதிர்மறையான செயல்கள் என்பதிலிருந்து இதை கொடூர சகாப்ததிற்கு எடுத்துச்செல்வார்கள். நாம் இதன் விளைவுகளை இந்தியாவை கடந்து உலகளவிலும் எதிர்கொள்ள நேரிடும். இதற்கான பாதைகள் திறந்தே இருக்கிறது. நாம் இதை இன்னும் முறைப்படுத்தப்பட்ட வழிகளில் சந்தித்தாக வேண்டும்.
தெகல்கா : சிமி அமைப்பை எப்படி பார்ப்பது, ஏற்கெனவே தெகல்காவின் தந்திரமான புலணாய்வில் சிமிக்கு எதிரான அரசின் அனைத்து வழக்குகளும் ஆதாரமற்றவை என்றும் இதன் பேரில் பல அப்பாவி இசுலாமியர்கள் பலிகடாவாக்கப்பட்டார்கள் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது எனினும் சிமி வெளிப்படையான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு தான்.
அருந்ததி ராய் : நாம் பஜ்ரங்தளை எப்படி பார்க்கிறோமோ அப்படி தான் சிமியையும் பார்க்க வேண்டும். இருந்தாலும் அவர்களின் நம்பிக்கையை எந்த அளவிற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதல்ல விசயம், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை புனைந்து உருவாக்கும் அரசுக்கு உதவும் வகையில் யாரும் வலிந்து போய் நிற்கக்கூடாது. நான் இதை வெறும் சட்டத்திற்கு எதிரான செயலாக மட்டும் பார்க்கவில்லை, மீண்டும் இங்கு மறுத்து ஒதுக்கித்தள்ளப்படுவது நீதி மட்டுமே. விக்ஷ்வ இந்து பரிக்ஷத்தோ,பஜ் ரங்தள்ளோ அல்லது சிமியோ தமது செயல்பாடுகள் அனைத்தும் சட்டத்திற்கும் நீதிக்கும் எதிரானது என்பதை புரிந்து கொண்டால் வன்முறை செயல்களில் ஈடுபட மறுப்பார்கள், இப்படித்தான் நமது சமூகம் தாங்கிப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது,ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் இன்னொரு மக்கள் கூட்டத்தை எரிக்கவும், கொல்லவும் முடிகிறது,
அதன் பிறகு அதற்கான சாட்சிகள் இருந்தும் கூட தண்டனை கிடைக்காது என்கிற துணிவான சூழல் உருவாக்கப்படுகிறது. அதே வேலையில் தாக்கப்பட்டு ஒடுக்கப்படும் மக்கள் நீதியின் பாலும் சட்டத்தின் பாலும் நம்பிக்கையை இழக்கிறார்கள். இந்த செயல்களின் விளைவு புரட்சியை கொண்டு வராது, நிச்சயமாக அழிவைத்தான் தரும். இதைப்போன்று மாற்றப்படுகின்ற சிறுபான்மை மக்கள் கூட்டம் கண்டிப்பாக ஒரு அரசை தேர்வு செய்யவோ, ஒரு புரட்சியை நடத்தவோ முடியாது. ஆனால் கண்டிப்பாக அது இந்த நாட்டை அழிப்பதோடு மட்டுமின்றி மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக மாறும்.
தெகல்கா : அரசின் அமைப்புகளால் தாக்குதல்கள் எப்போது நடக்கும் என்று யூகித்தறிய முடியாததாலும், உண்மை குற்றவாளிகளை கண்டறிய முடியாததாலும் எப்போதுமே அவர்களிடையே ஒரு வகை பீதி நிலவுகிறது. அவர்கள் என்ன வகையான பிரச்சனைகளை எதிர் கொள்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
அருந்ததி ராய் : பிரச்சனையின் இதயம் என்னவெனில், இங்கு யாருக்குமே பிரச்சனையின் அடியாழம் வரை சென்று பார்க்க விருப்பமே இல்லை.
மீண்டும் மீண்டும் நமக்கு கூறப்பட்டவை அனைத்தும் நிறைய பொய்கள் என்றே நிரூபிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு கிட்டதட்ட 5 லட்சம் சிப்பாய்கள் எல்லையில் இருத்தப்பட்டார்கள், இந்த நகர்தலில் அறுநூற்றுக்கும் அதிகமான பேர் மடிந்தார்கள். மீண்டும் மீண்டும் கூறப்பட்டு உறைந்து போன பொய்களால் நாம் இன்று அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். தெகல்காவின் ‘சிமி’ விசாரனையை எடுத்துக்கொள்ளுங்கள் இன்று வரை ஒவ்வொரு முறையும் யாரெல்லாம் பொய்களை அம்பலமாக்கினார்களோ அவர்களையெல்லாம் அன்று தேசவிரோதிகள் என்று வாயை அடைத்தார்கள். ஆனால் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய சிறு முயற்சி கூட எடுக்கப்படவில்லை. பொய்யை ‘பொய்’ என்று நிறுவிட எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. உண்மை குற்றவாளிகளை கண்டறிவதற்கான ஆர்வமின்மையின் தேக்கம் பல விதமான கருத்துக்களை தோற்றுவித்துள்ளது. இந்திய முஜாகிதீன்கள் யார் என்பதை ஏன் அவர்களால் அறுதியிட்டு கூற முடியவில்லை. நாம் அனைவரும் பரிசீலிக்கப்படாத, ஆய்வுக்குட்படுத்தாத பல கற்பனைகளையே வைத்திருக்கிறோம். சொல்லப்போனால் இந்த அரசு பிரச்சனையின் அடி ஆழத்தை காண விரும்பவில்லை!
thanks To: http://brahmanicalterrorism.wordpress.com
மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்க சொல்லி ஓலமிடும் தெருநாய்!!

"பயங்கரவாதத்தின்" இன்னொரு முகத்தை நாம் மிக மெலினப்படுத்தப்பட்ட மொழிவுகளால் உய்துணர முடியாது! இதைப் புரிக முதலில்-புரிக!இந்தத் தருணத்தில் இந்தியாவின்மீது கவிந்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்தின் அரசியல் மோசடிகள் மிகவும் கெடுதியானவொரு சூழலை முழுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கு வழங்கப் போகிறது.கடந்தபல நூற்றாண்டுகளாக இந்தியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கங்கள் காலனித்துவக்காலத்தில்கூட அந்நியர்களைத் தமது ஏஜமானர்களாக்கி, முழுமொத்த இந்தியாவையும் சுரண்டிக் கொழுத்தார்கள்.அவர்களில் மிக முக்கியமான டாட்டா போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அன்று, நிபந்தனையற்ற உதவிகளை காந்திக்கு வழங்கிப் போலிச் சுதந்திரத்துக்குப் பின்பான இந்தியாவைத் தமது காலடிக்குள் வைத்துச் சுரண்டிக் கொழுத்தார்கள்.இது,இந்தியப் போலித் தேசியத்துள் மறைக்கப்பட்ட வரலாறு.இதைக் காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரன் கோட்சேயின் மொழியில் நாம் இனம் காணமுடியும்.இந்தியாவின் மிக முக்கியமான கல்வியாளரும் சமூகவியலாளருமான திரு.அஸீஸ் நந்தியைக் கற்றவர்களுக்கு இதுள் சந்தேகம் வரமுடியாது.

இன்றும், இதே கதையோடு தலைமுறை கடந்த "டாடட்டா"நிறுவன அதிபர் திருவாளர் இராற்றான் டாடா தனது தாஜ்மால் கோட்டலின் சிதைவுகளுக்கு மத்தியில் ஆத்திரத்தோடு இந்தியப் பாதுகாப்புக்குறித்துத் தமது எஜமானர்களின் தொலைக்காட்சிச் சேவையான சி.என்.என்.க்குப் பதிலளிக்கையில், இந்தியப் பாதுகாப்புக்குறித்து கேள்வி எழுப்புகிறார்.தமது கோட்டலுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலுள்ள குறைபாடுகளைக்குறித்து மூச்சுவிடும் இந்தக் களவாணிப்பயல் மோடியின் தலைமையில் அழித்தொழிக்கப்பட்ட அப்பாவி முஸ்லீங்கள் மூவாயிரம் பேர்கள் குறித்தோ, அவர்களது வாழ்வாதாரங்களின் சிதைப்புக் குறித்தோ மூச்சு விடவில்லை அன்று!இப்போது இத்தகைய துரோகிகளின் மூச்சுத் திணறல் தமது எஜமானர்களின்(அமெரிக்க-மேற்குலக) நாடுகளினது பொருளாதார இருப்போடு சம்பந்தப்படுகிறது.மும்பையில் நடந்தேறிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவினதும் பாகிஸ்த்தானினதும் அரசியல் நடாத்தையில் பல மாற்றங்களை வேண்டி, உலகம் எதிர்பார்க்கிறது.அதற்கேற்ற சதிவேலைகளை உருவாக்கியவர்கள் மும்பாயில் நடந்தேற்றிய ஒரு நாடகம் பல நூறு மக்களைப் பலியெடுத்துள்ளது.இதன் உண்மை மிக விரைவாக அம்பலத்துக்கு வரும்-வரவேண்டும்!பாகிஸ்த்தானும்,இந்தியாவும் போருக்குச் செல்வதை உலகம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிடக்கிறது.இதற்கு மும்பாயில் நடத்திமுடிக்கப்பட்ட தாக்குதல் வழிவகுக்குமென அவர்கள் ஏலவே திட்டமிட்டார்கள்.அது அவர்களது பொருளாதார நலனுக்குமட்டுமல்ல,இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பதற்கும் இதுவே அவர்களது இறுதி முடிவாகவும் இருக்கிறது.மேற்குலகம் திட்டமிட்டபடி இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தானும் அதனால் வளர்த்தெடுக்கப்படும் காஸ்மீரிய விடுதலை கோரும் அமைப்பான Jaish-i-Mohammed மற்றும் Lashkar-i-Toiba அடிப்படைவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்லும் கருத்துகளுக்குள் தமது பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் ஆயுதத் தளபாடவுற்பத்திச் சாலைகளுக்கான புதிய ஓப்பந்தங்கள் குறித்த நோக்கு இருக்கிறது என்பதை நாம் இனம் காணவேண்டும்

அமெரிக்க-ஐரோப்பியப் பங்குச் சந்தைகளில் தமது பெரும் மூலதனத்தை இழந்த இத்தேசங்களின் ஆளும் வர்க்கங்களுக்கு மிக அவசியமாக ஒரு பாரிய யுத்தம் தேவையாக இருக்கிறது.யுத்தங்களில் அழிக்கப்படும் இராணுவத் தளபாடங்களால் ஆயுத உற்பத்தி தொடர்ந்து மேல் நிலைக்கு வரும்போது, அத்தகைய தொழிலில் முதலீடு செய்த இந்த ஆளும் வர்க்கம் ஓரளவாவது அழிந்த மூலதனத்தை; மிக விரைவாகத் திரட்ட முடியும்.இது,பொருளாதாரத்தின் அரிச்சுவடியாகத் திருவாளர்.கெய்னிஸ் குறித்துரைப்பதிலிருந்து நாம் விளங்க முடியும்.நவ லிபரல்களின் பொருளாதார இலக்குள் யுத்தம் மிக அவசியமானது.இதனால் அவர்கள் செய்த பற்பல யுத்தங்களை நாம் வரலாற்றில் கண்டோம்.
இன்று,மேற்குலகப் பொருளாதாரச் சரிவைக்குறித்து யுத்தமொன்றை நேரடியாகச் செய்வதற்கு மேற்குலக நாடுகளின் மக்கள் தடையாக இருக்கிறார்கள்.அதேபோன்று, அமெரிக்கா இருக்கும் பொருளாதாரச் சூழலில் அது இன்னொரு யுத்தத்தில் ஈடுபட்டுத் தமது எஜமானர்களைக் காக்கும் நிலையில் இல்லை!இதன் தாக்கம் மிகவிரைவாக மூன்றாந்தரப்பால் யுத்தம் நடாத்தப்பட்டுத் தமது ஆயுத உற்பத்தியால் வளங்களைப் பெருக்குவதற்கு ஏதாவதொரு இழிச்சிவாய்த் தேசங்கள் அவசியமாக இனம் காணப்பட்டது.அங்கே,மிகப் பலமான முரண்பாடுகளைக் கொண்ட யுத்தமுனைப்புத் தேசங்களாக இருப்பவை தென்கிழக்காசியாவில் இந்தியாவும்,பாகிஸ்த்தானுமாகவே இனம் காணப்படுகிறது.இதற்குப் பல தசாப்தங்களாக இந்துமதப் பரிவாரங்கள் முகாந்திரம் அமைத்துள்ளார்கள் கூட்டாக!
இவ்விரண்டு தேசங்களினதும் முரண்பாடுகள் வெறுமனவே பொருளாதார இலக்குகளாக நீர்த்துப்போவதைத் தடுத்து, அவற்றுக்கு "இந்து-முஸ்லீம்"எனும் மிகப் பெரிய மத முரண்பாடு உருவகப்படுத்தி அடுத்த பல தசாப்தத்துக்கு அதையே யுத்தமாக நடந்தேற்றுவதற்கு அவசியமான தத்துவார்த்த அடித்தளதைக் கோரிக் கொள்கிறது மேற்குலகமும் அமெரிக்காவும்.இது மிக அவசியமான அரசியற் சூழ்ச்சியோடு அடுத்த தசாப்த வியூகமாக அமெரிக்க-மேற்குலக அரசியல்-பொருளாதாரச் சூழலில் விரிகிறதென்பதை மூன்றாம் உலகத்தவர்களின் அரசியல் புரிந்துகொள்வது மிக அவசியமானது.
அண்மைக் கிழக்குத் தேசங்களின் மூலதன இருப்பினது வளப் பிரிப்புப் போட்டியானது மேற்குலகத்தோடு மிகக்கெடுதியான பகை முரண்பாட்டைக் கொண்ட இஸ்லாமிய அடிப்படை வாதமாக முன்னே தள்ளுகிறது.இதனால்,மூலதனத்தைத் தொடர்ந்து கையகப்படுத்தும் அரசியல் வியூகமானது மேற்குலகத்தின் முற்றத்துக்கு இஸ்லாமியக் குண்டுதாரிகளைக் கையோடு கூட்டிவருகிறது.இது தமது தேசத்தின் உள்நாட்டு அரசியலில் பாரிய பின்னடைவுகளை இத்தேசங்களுக்குள் ஏற்படுத்திவருகிறது. இப்போது,இந்த இஸ்லாமியக் குண்டுகளை இந்தியாவை நோக்கித் திசை திருப்பிவிடும்போது,மிகவும் சாதகமான பொருளாதார வளர்ச்சியை மேற்குலக மற்றும் அமெரிக்கா மூலதனம் எட்டிவிடும்.
ஈராக் யுத்தத்துக்குப் பின்னான அரசியல்-பொருளாதார மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சூழல் மிகவும் கெடுதியாக மேற்குலகைப் பாதிக்கிறது.என்றுமில்லாதவாறு பெரும் பாதுகாப்புச் செலவீனங்களும் பொருளாதார நெருக்கடிகளையும் இத்தேசங்கள் சந்திக்கும்போது,இந்தியா மற்றும் சீனா போன்ற தேசங்கள் மிக இலகுவாக உலகத்தில் தமது சந்தைகளை வரிவுப்படுத்திப் பொருளாதார ஸ்த்திரத்தைக்கொண்டியங்குவது சகிக்கமுடியாத அச்சத்தை இந்தத் தேசங்களுக்கு ஏற்படுத்தியதைக் கடந்தகால மேற்குலகத் தகவல் மற்றும் ஊடகங்களில் பயிற்சியுடையவர்கள் அறிந்திருக்க முடியும்.
இன்று,"கிறிஸ்த்துவ-இஸ்லாம்" பகை முரண்பாட்டைத் திசை திருப்பி "இந்து-இஸ்லாம்" பகை முரண்பாடாக்கிய பெருமைக்கு மேற்குலகத்தோடு சேர்ந்து-கள்ளக்கூட்டுவைத்து இயங்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்திய மக்களின் எதிரிகளுக்கே சேரும்.
இந்தப் பார்ப்பனிய-பனியாச் சகதிகள் பாரத தேசத்தின் பாதுகாப்பு என்று கூலிக்குக் குரல் கொடுத்துப் பாகிஸ்த்தானுக்கும், இந்தியாவுக்குமானவொரு யுத்தத்தை மேற்குலகோடிணைந்து உருவாக்க முனையுந்தருணங்கள் தென்படுகின்றன.இங்ஙனம் யுத்தம் மேல் நிலைக்கெழுந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை யுத்தத்துக்குள் கொட்டித் தமது மக்களில் பலரைப் பலியாக்கும்.இதனால் தேசம் தனது பொருளாதார ஸ்த்திரத்தை இழந்து,அனைத்து வளங்களையும் மேற்குலக ஆயுத உற்பத்தியாளர்களிடம் தாரவார்த்துவிடும்.இதுவே இன்றைய மேற்குலக-அமெரிக்க அரசியல்-பொருளியல் வியூகமாக எதிர்காலத்து அரசியல் இலாபங்களையும் அதனூடாகச் சந்தை விரிவாக்கத்தையும் தக்கவைக்க முனைகிறது.
இதையெல்லாம் ஒருங்கே நிறைவேற்றத் தகுந்த மாதிரிகளை உருவாக்கத் தமிழ்நாட்டுப் பார்ப்பனியக்கூட்டமும் தம்மாலான முயற்சியல் கூக்குரலிடுகிறது.அதில் ஒன்றுதாம் யூதர்களிடம் ஆலோசனை மற்றும் இந்திய இராணுவத்திடம்-மோடியிடம் ஆட்சியை ஒப்படை என்று ஓலமிடுகிறது.இத்தகையத் தெரு நாய்கள் இந்தியத் தேசத்தையும்,இந்திய உழைப்பாளர்களையும் அந்நியத் தேசங்களுக்குக் காட்டிக் கொடுத்து, கொலை செய்து வருகிறது.இதன் ஆரம்பம் மும்பையில் தொடரவில்லை.அது, ஏலவே மோடி தலைமையில் அயோத்திக்கான கொலைகளாக நடந்தேறியது.
அந்நிய ஆர்வங்களுக்கும் அமெரிக்க-மேற்குலக உளவுப்படைகளுக்கும் ஏஜென்டுக்களாக மாறியுள்ள இந்தப் பார்ப்பனியத்தை(சுப்பிரமணியசுவாமி மற்றும் சோ,சிதம்பரம் போன்றவர்களை மனதில் நிறுத்தவும்) வேரோடு சாய்பதற்கு மேற்குலகமே முட்டுக்கட்டையாக இருக்கும்.ஏனெனில், அடுத்தகட்ட யுத்த முனைப்பும்,பகை முரண்பாடும் மையங்கொள்வது இந்தியப் பிராந்தியத்தில் என்பது முடிந்த முடிவாகும்.அது,"இந்து-இஸ்லாம்"மதவாத யுத்தமாக உலகம் தகவமைக்கிறது!
இது குறித்து,இந்திய வம்சாவழியாகிய ஒவ்வொரு மனிதரும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.பாப்பனிய மற்றும் மேற்குலக உறவுகளை அம்பலப்படுத்தி,இவர்களைத் தோற்கடிக்காமால் தென்கிழக்காசியப் பிராந்தியத்தை சமாதான பூமியாக்கமுடியாது.
ப.வி.ஸ்ரீரங்கன்
30.11.2008
நன்றி : அகதி
Thursday, November 27, 2008
தீவிரவாதி பாண்டேவுக்கு டிச. 1 வரை போலீஸ் காவல்
இதில் தீவிரவாதி தயானந்த பாண்டே, பெண் தீவிரவாதி பிரக்யா சிங் தாக்கூர், தீவிரவாதி புரோஹித் மற்றும் சில முக்கிய குற்றவாளிகளின் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. வீடியோ கிளிப்பிங்கில், பாண்டே, பிரக்யா, புரோஹித் மற்றும் தீவிரவாதி பேசிக் கொண்டுள்ளனர். அவர்கள் ஆர்.டி.எக்ஸ், வேதிப்பொருட்கள், கையெறி குண்டுகள், பயிற்சி உள்ளிட்டவை குறித்து பேசிக் கொண்டுள்ளனர். ஏதோ ஒரு கோவிலில் வைத்து இவர்கள் பேசியிப்பது தெரிகிறது. அபினவ் பாரத் தீவிரவாதி அமைப்பின் மூலம் ஹிந்துக்களுக்கு பிரசாரத்தை மேற்கொள்வது எனவும் அவர்கள் பேசியுள்ளனர். எனவே பாண்டேவை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி வரை பாண்டேவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.