Thursday, October 22, 2009

18 இளம்பெண்களை கற்பழித்து கொலை செய்த ஆசிரியர் கைது

திருமண ஆசை காட்டி 18 இளம்பெண்களை கற்பழித்து, அவர்களுக்கு சயனைடு மாத்திரையை, கருத்தடை மாத்திரை என்று கொடுத்து கொலை செய்த ஆசிரியர் ஒருவரை மங்களூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்ட மக்களை கலக்கிய இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரிமாரு கிராமத்தைச் சேர்ந்த அனிதா (வயது 22). இவர் கடந்த ஜுன் மாதம் 17-ந் தேதி காணாமல் போனார். அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

காணாமல் போன அனிதாவின் செல்போனில் இருந்து யார், யாருக்கு பேசப்பட்டு இருக்கிறது என்பதை கவனமாக ஆய்வு செய்தனர். அப்போது ஆச்சரியப்படும் வகையில் ஏற்கனவே காணாமல் போயிருந்த சில பெண்களுக்கு அனிதா தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. அந்த பெண்களின் செல்போன்களை தொடர்பு கொண்டபோது, அதில் ஒரு பெண்ணின் செல்போனை ஒருவன் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவன் அந்த செல்போனை மோகன்குமார் என்ற ஆனந்த் (வயது 46) என்பவனிடம் வாங்கியதாக தெரிவித்தான். உடனே போலீசார் மங்களூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த மோகன்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவன் அனிதாவை திருமண ஆசை காட்டி கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவனிடம் துருவி, துருவி விசாரணை நடத்தியதில், கடந்த 5 ஆண்டுகளில் அவன் 18 பெண்களை கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது. தனது உடல் பசிக்காவும், பணத்துக்காகவும் அவர்களை கொன்றதை ஒப்புக்கொண்டான்.

அவனை கைது செய்து நடத்திய விசாரணையில், இளம்பெண்களை தனது வலையில் விழ வைத்தது எப்படி? என்ற தகவல் வெளியாகி உள்ளது. 30 வயதுக்கு மேலும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களை நோட்டமிட்டு, வரதட்சணை இல்லாமல் அவர்களை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறுவான். இதில் மயங்கிய பெண்களை வெளிïருக்கு அழைத்துச் சென்று, ஓட்டல் அறைகளில் தங்க வைத்து தனது காமப்பசியை தீர்த்துக் கொள்வான்.

பின்னர், நாம் பாதுகாப்பற்ற `செக்ஸ்' உறவு வைத்துக்கொண்டதால், திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் ஆகிவிடக்கூடாது என்று கூறி கருத்தடை மாத்திரை சாப்பிடும்படி வற்புறுத்துவான். ஆனால், கருத்தடை மாத்திரைக்கு பதிலாக, சயனைடு மாத்திரை கொடுத்து கொடூரமான முறையில் கொலை செய்து இருக்கிறான்.

மோகன்குமார், 23 ஆண்டுகள் பல்வேறு இடங்களில் பள்ளிக்கூட ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறான். கடந்த 2003-ம் ஆண்டில் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தபிறகுதான், இப்படி காமக்கொடூரனாக மாறி இருக்கிறான். ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்த அவன், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட தகவலும் விசாரணையில் தெரியவந்தது.

கைதான மோகன்குமாரிடம் இருந்து 8 சயனைடு பொட்டலங்கள், 4 செல்போன்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட அனிதாவிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

No comments: