Wednesday, October 7, 2009

திரையில் செய்தால் கலைச்சேவை; அறையில் செய்தால்...?


ஒரு காலத்தில் மக்களின் பொழுது போக்கு சாதனமாக நாடகங்களும், தெருகூத்துகளும் இருந்தன. அந்த கால கட்டத்தில் நாடகத்தில் பெண் வேடத்திற்கு ஒரு ஆண்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு பெண் வேடமிட்டுவருவார். பின்னாளில் பெண் வேடத்திற்கு நேரடியாக பெண்ணே வரும் நிலை வந்தது. ஆனாலும் நாயகனுக்கும்-நாயகிக்கும் இடைவெளி இருந்தது. இது ஆரம்பகால சினிமாக்களிலும் பார்க்கலாம். டூயட் பாடும் நாயகனும்-நாயகியும் ஆளுக்கொரு மரத்தை சுற்றிவருவார்கள். நாளடைவில் 'தொட்டுவிட தொட்டுவிடதொடரும்' என்று ஆரம்பித்து நாயகனும்-நாயகியும் தொட்டு பிறகு பட்டு, பிறகு கட்டிப்பிடித்து, பிறகு கட்டி உருள ஆரம்பித்து விட்டார்கள். இன்றைய இந்திய சினிமாவில் 99 சதவிகித ஆபாச காட்சிகள் அரங்கேறுவதை பார்க்கிறோம். ஒரு காலத்தில் அசிங்கமாக கருதப்பட்டவைகள் இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டவைகளாக மாறிவிட்டது. இதை நாம் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் திரையில் ஆபாசத்தை விதைத்து இளைய சமுதாயத்தை வழிகெடுக்கும் இந்த திரை கூத்தாடிகளுக்கு பெரிய செயற்கரிய சாதனை செய்தது போன்று, மத்திய மாநில அரசுகளின் பாராட்டுக்கள்-கேடயங்கள்- விருதுகள். இது போக 'நடிக்கும்' இவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தோ அளவிடமுடியாதது. நமது தெருவில் வசிக்கும் ஒரு பெண் இன்று பக்கத்துவீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள். நாளை அடுத்த வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள், நாளை மறுநாள் எதிர் வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள். இவளை சமூகம் என்னபெயர் சொல்லி அழைக்கும் என்பதை நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இதே காரியத்தை ஒரு பெண் திரையில் செய்தால்..? சரி விஷயத்திற்கு வருவோம்.

புவனேஷ்வரி என்ற ஒரு நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்படுகிறார். இவர் ஏற்கனவே ஒரு முறை கைது செய்யப்பட்டவர் என்பதால், ஏன் காவல்துறை என்னை மட்டும் குறிவைத்து பிடிக்கிறது என்று சாடியதோடு சில நடிகைகள் இதே தொழிலை[?] செய்வதாக புவனேஸ்வரி கூறியதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாக ஆடிப்போனது கனவு தொழிற்சாலை. உடனடியாக படை திரண்டு கமிஷனரிடம் மனு; கண்டனக்கூட்டம் என்று கனலை கக்க தொடங்கிவிட்டது. மறுபுறமோ விபசார வழக்கில் கைதான புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜராக வரும்போது பர்தாவுடன் வந்தது முஸ்லீம் சமுதாயத்தைச் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

காசுக்காக அனைத்தையும் 'துறக்கும்' இந்த கழிசடைகள் கைது செய்யப்பட்டவுடன் மட்டும் அனைத்தையும்'மூடுவது' ஏன் ? இந்த விபசாரிகள் பர்தா அணிந்து கோர்ட்டுக்கு செல்வதால் , வழக்கமாக பர்தா அணியும் ஒரு முஸ்லீம் பெண் தன் சொந்த வழக்கு விஷயமாக கோர்ட்டில் பர்தாவோடு நிற்கும் போது, இது அந்த மாதிரி 'கேஸோ' என்று பார்க்கும் நிலை உருவாகிறது. எனவே விபச்சாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும்போது பர்தா அணிவதை தடுக்கவேண்டும் என்று பலமுறை முஸ்லிம்கள் கூறியும் அரசு கண்டுகொள்வதாக இல்லை. இந்நிலையில்,
கொதித்தெழுந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மகளிர் பிரிவு பெண்கள் திரண்டு சென்று கமிஷனரிடம், நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்துள்ளனர். அதோடு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எங்கள் அமைப்பு சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே அரசு இனியேனும் விழித்துக்கொண்டு முஸ்லீம் சமுதாயத்தின் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். அதோடு சினிமாவால் சீரழியும் சமூகத்தை பாதுகாக்க, 'சென்சாரின் கத்திரியை' தீட்டவேண்டும். மேலும் விபசாரத்தின் மீதான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே கண்ணியம் காக்கும் மக்களின் ஆசையும் வேண்டுகோளுமாகும்.

No comments: