இதுபற்றி விடுதலையான அஸ்ரப் என்ற சகோதரர், நாங்கள் இன்னும் பத்து-இருபதுநாளில் தண்டினை காலம் முடிந்து தானாகவே விடுதலையாக வேண்டியவர்கள். மற்ற கைதிகள் 50 பேர் சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுவித்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். ஆக கருணாநிதி ஆடிய சதுரங்கம் தெளிவாக புலப்படுகிறது. இது ஒருபுறமிருக்க , இந்த கைதிகள் விடுதலைக்கு எங்கள் இயக்கமே காரணம் என்று விரைவில் சிலர் கிளம்பாமல் இருந்தால் சரி! அதே நேரத்தில் மற்றொரு உண்மையான விடுதலையும் இந்த நாளில் நிகழ்ந்துள்ளது. ஆம்! உலக ரவடி புஷ்ஷிற்கு வாழ்நாள் இழிவை தந்த மாவீரன் முன்தசர் அல் ஸய்தி இராக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவர் சுமார் பத்து மாதங்களில் விடுவிக்கப்பட்டுள்ளார். புனிதமிக்க ரமலானில் மேற்கண்ட இரு விடுதலைகளும் முஸ்லிம் உலகுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாகும்.
Thursday, September 17, 2009
கைதிகள் விடுதலை; ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்த கலைஞர்!
தமிழக அரசியல் தலைவர்களில் 'அரசியல் சாணக்கியர்' என்று கருணாநிதியை வர்ணிப்பர். அவரும் அதற்கேற்றார்போல் அவ்வப்போது தனது சாணக்கியத்தனத்தை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளின்போது 1405 கைதிகள் விடுதலைக்கு உத்தரவிட்ட கருணாநிதி, அதில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பரிதவித்துவரும் முஸ்லிம்கள் விடுதலையாகாமல் பார்த்துக்கொண்டார். அதுபற்றி சில சமுதாய அமைப்புகள் கோடிட்டு காட்டியபோது, அவர்கள் மதரீதியான மோதல் சம்மந்தப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் எனவே அவர்களை விடுதலை செய்வது சாத்தியமில்லை என்று ஒரு சால்ஜாப்பு கருத்தையும் உதிர்த்தார். ஆனால், இந்த ஆண்டு 'பெரிய மனது வைத்து' அடுத்த மாதம் தண்டனை முடிந்து விடுதலையாக இருந்தவர்களில் பத்து பேரை விடுதலை செய்து இஸ்லாமிய சமுதாயத்தின் மீது தனக்குள்ள அக்கறையை[?] காண்பித்துள்ளார். விடுதலையான கைதிகளுக்கு விடுதலையானது ஒரு புறம் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், மறுபுறம் கருணாநிதியின் கருணையால் விடுதலையானவர்கள் என்ற பெயர் அவர்களுக்கு வேதனையளிப்பதாக உள்ளது.
இதுபற்றி விடுதலையான அஸ்ரப் என்ற சகோதரர், நாங்கள் இன்னும் பத்து-இருபதுநாளில் தண்டினை காலம் முடிந்து தானாகவே விடுதலையாக வேண்டியவர்கள். மற்ற கைதிகள் 50 பேர் சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுவித்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். ஆக கருணாநிதி ஆடிய சதுரங்கம் தெளிவாக புலப்படுகிறது. இது ஒருபுறமிருக்க , இந்த கைதிகள் விடுதலைக்கு எங்கள் இயக்கமே காரணம் என்று விரைவில் சிலர் கிளம்பாமல் இருந்தால் சரி! அதே நேரத்தில் மற்றொரு உண்மையான விடுதலையும் இந்த நாளில் நிகழ்ந்துள்ளது. ஆம்! உலக ரவடி புஷ்ஷிற்கு வாழ்நாள் இழிவை தந்த மாவீரன் முன்தசர் அல் ஸய்தி இராக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவர் சுமார் பத்து மாதங்களில் விடுவிக்கப்பட்டுள்ளார். புனிதமிக்க ரமலானில் மேற்கண்ட இரு விடுதலைகளும் முஸ்லிம் உலகுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாகும்.
Tuesday, September 15, 2009
கெட்டிதட்டிப் போய்விட்டது பா.ஜ.க
பழ. கருப்பையா கட்டுரை
[ பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா முதன்மைக் காரணம்தான். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு நேருவும், வல்லபாய் பட்டேலும் துணைக் காரணங்கள் அல்லவா! ஜின்னாவைத் தலைமுழுகி விட்டு மீதமுள்ள இந்தியாவை எல்லா அதிகாரங்களோடும் நிம்மதியாக ஆளலாம் என்று ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் கருதியது வரலாற்று உண்மைதானே!]
கெட்டிதட்டிப் போய்விட்டது பா.ஜ.க
ஒரு கட்சிக்காரர், எதிர்த்தரப்பினர் ஒருவரைப் பாராட்டினார் என்பதற்காக அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டார் என்னும் செய்தி நடுநிலையிலிருந்து பார்க்கிற யார் யாருக்கும் செரிக்க முடியாத ஒன்றாகும்!
அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தானைத் தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவைச் சமயச் சார்பற்றவர் என்று சொல்லிவிட்டாரென்றும், வல்லபாய் பட்டேலை பிரிவினையோடு தன்னுடைய நூலில் தொடர்புபடுத்திவிட்டார் என்றும் குற்றம்சாட்டிக் கட்சியை விட்டு நீக்கிவிட்டனர்.
இஸ்லாமியர்களும் இந்துக்களும் வேறு வேறு; அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தும் வேறு வேறு; அவர்கள் கடைப்பிடிக்கின்ற சட்டங்கள் வேறு வேறு என்றெல்லாம் நாட்டை உடைத்து, அதன் காரணமாக இரு தரப்பாரின் ரத்தமும் ஆறாகப் பெருகி ஓடக் காரணமாகி, கடைசியில் மத அடிப்படையிலான பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டு போன ஜின்னா, எப்படி மதச் சார்பற்றவராக இருக்க முடியும் என்னும் கேள்வியே ஜஸ்வந்த் சிங்கின் "கல்தா'வுக்குக் காரணம்!
பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா முதன்மைக் காரணம்தான். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு நேருவும், வல்லபாய் பட்டேலும் துணைக் காரணங்கள் அல்லவா! ஜின்னாவைத் தலைமுழுகி விட்டு மீதமுள்ள இந்தியாவை எல்லா அதிகாரங்களோடும் நிம்மதியாக ஆளலாம் என்று ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் கருதியது வரலாற்று உண்மைதானே!
பெருவாரியான இந்துக்களும் சிறுபான்மை இஸ்லாமியர்களும் சமநிலையில் சேர்ந்து வாழ்வதற்கு ஜனநாயகம் இடங்கொடுக்காது என்று ஜின்னா அஞ்சினார். ஜனநாயகம் என்பது எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. ஆகவே எண்ணிக்கையில் குறைந்தவர்கள் அஞ்சுவது இயல்புதானே!
நேருவும், ஜின்னாவும் ஒரே தரத்திலுள்ள அறிஞர்கள்தாம். ஆனால் தலைமையமைச்சராக வர நேருவால்தானே முடியும். காந்தி தலைமையமைச்சர் நாற்காலியை ஜின்னாவுக்கு வழங்கிப் பிரிவினையைத் தடுக்க முயன்றார்.
காந்தியின் வார்த்தை கல்வெட்டு; வார்த்தைப் பிறழ்ச்சி என்பதை வாழ்க்கை முழுவதிலும் அறியாதவர் காந்தி. இந்தியா அந்த மகாத்மாவின் காலடியில் சொக்கிக் கிடந்தது எல்லா வகையிலும் நியாயமே.
சமயச் சார்பற்ற இந்தியா என்று என்னதான் டமாரங்கள் முழங்கினாலும் இங்கே அதிகாரமில்லாத அலங்காரப் பதவிகளைத்தானே அப்துல் கலாம்கள் வகிக்க முடியும்.
காந்தியின் உறுதிமொழி ஒருபுறமிருக்கட்டும். இப்போதுள்ள பிரச்னை ஜின்னா அதிகார நாற்காலியில் உட்காருவது குறித்ததன்று. முஸ்லிம்கள் நிலையாக அதிகாரத்தை அடைவது குறித்தது.
சிக்கல் தெளிவாகப் புரிந்துவிட்ட நிலையில், இந்தியா உடையாமல் இருக்கப் புதிய வழிகளுக்கான முயற்சிகள் நடந்தன.
சிறுபான்மை என்னும் அச்சம் அகற்றப்பட 1946-ல் இந்தியாவுக்கு வந்த வெள்ளை அரசாங்கத்தின் காபினெட் தூதுக் குழு ஒரு நிகரற்ற யோசனையை முன்வைத்தது.
அந்தந்த மாநிலங்களுக்கு எல்லா அதிகாரங்களையும் வழங்கிவிட்டு, மூன்று அதிகாரங்களை மட்டும் மத்திய அரசில் வைத்துக் கொள்வது என்பதுதான் அந்த யோசனை. இந்த யோசனைக்கு காந்தி இசைவாகத்தான் இருந்தார். ஜின்னாவும் சிறு சிறு திருத்தங்களுடன் அந்த யோசனையை - ஏற்கத் தயாராகிவிட்டார்.
காபினெட் தூதுக் குழுவின் யோசனைப்படி முஸ்லிம் மாநிலங்களான கிழங்கு வங்கம், கிழக்குப் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய முஸ்லிம் மாநிலங்களை முஸ்லிம்களே ஆண்டுகொள்வார்கள். மத்தியப் பிரதேசத்தையும், உத்தரப் பிரதேசத்தையும் இன்ன பிற மாநிலங்களையும் இந்துக்களும், இன்பத் தமிழ்நாட்டைத் "திராவிடக் குடும்பங்களும்' ஆளும்.
அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்படாத அதிகாரங்களும் மாநிலங்களையே சாரும் என்பதால், மத்திய அரசு ராணுவம், அயல்நாட்டு விவகாரம் என்று நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு போன்றவற்றில் மட்டுமே கருத்துச் செலுத்த முடியும்.
மாநிலங்கள் முற்றான தன்னாட்சியுடனும், மத்திய அரசு ஓர் இணைப்பு அரசாகவும் திகழும் என்பதுதான் காபினெட் தூதுக் குழுவின் பரிந்துரை. இதில் யாருடைய ஆதிக்கமும் யாரின் மீதும் படராது.
இதிலே மிகப்பெரிய விந்தை என்னவென்றால் எந்த வெள்ளைக்கார அரசு 1907-ல் வங்கத்தை இந்து வங்கம் என்றும் முஸ்லிம் வங்கம் என்றும் பிரித்து வகுப்பு வாதத்துக்கு வித்திட்டு வெறுப்பை வளர்த்துக் குளிர் காய்ந்ததோ, அதே வெள்ளைக்கார அரசு காபினெட் தூதுக் குழுவை 1946-ல் அனுப்பி, அதே வங்கப் பிரிவினை மாநிலப் பிரிவினையாகவே இருக்கட்டும், நாட்டுப் பிரிவினையாகிவிட வேண்டாம் என்பதற்குக் கடும் முயற்சி செய்தது.
1907-ல் தலைமை ஆளுநராக இருந்து வங்கத்தை மத அடிப்படையில் பிரித்தவர் கர்சன் என்னும் வெள்ளைக்காரர். கர்சனைக் "குரங்கு' என்று வாயார வைகிறான் பாரதி. ""கர்சன் என்னும் குரங்கு கவர்ந்திடுமோ'' என்பது பாரதியின் புகழ்பெற்ற பாடல் வரி.
கர்சனின் வங்கப் பிரிவினைதான் பெரிய அளவுக்கு விடுதலைப் போராட்டத்தை முடுக்கிவிட்ட வரலாற்று நிகழ்ச்சி.
1907-ல் வங்கத்தை மதரீதியாகப் பிரிப்பதற்கு நீ யார் என்று கேட்டவர்கள், காபினெட் தூதுக்குழுவின் பரிந்துரையைப் புறக்கணித்து 1947-ல் வங்கத்தை மட்டுமன்று, பஞ்சாபையும் பிளந்து முஸ்லிம் பாகிஸ்தான் ஏற்பட இசைந்து நின்றது காலத்தின் கேலிதானே!
காபினெட் தூதுக்குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டிருந்தால் இந்திய ஒருமைப்பாடு காக்கப்பட்டிருக்கும். ஆர்.எஸ்.எஸ். விரும்பியவண்ணம் "அகண்ட பாரதம்' நிலைபெற்றிருக்கும். ஆசியாவில் மட்டுமென்ன; அகிலத்திற்கே இந்தியாதான் பெரிய நாடாக இருந்திருக்கும். சீனா வாலைச் சுருட்டிக் கொண்டு நமக்குச் "சலாம்' சொல்லாதா?
இவையெல்லாம் நடக்க முடியாமல் போனதற்கு யார் காரணம்? உறுதியாகக் காந்தியும் ஜின்னாவும் காரணமில்லை. காபினெட் தூதுக் குழுவின் பரிந்துரைகளை, 1946 ஜூலையில் நடந்த மும்பை அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு, ஒதுக்கித் தள்ளியதோடன்றி அவற்றுக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய நேருவே காரணம். அதன் விளைவாக, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது; ஜின்னா மீண்டும் பாகிஸ்தான் பல்லவிக்குப் போய்விட்டார்.
ஜஸ்வந்த் சிங் என்ன பிழையாகச் சொல்லிவிட்டார்? அவர்மீது பாய்ந்து பிறாண்டுகிறார்களே... ஜின்னா சமயச் சார்பற்ற கொள்கையுடையவர் இல்லையா?
உலக முஸ்லிம்களின் தலைவர் கலீபா. அவர் அந்தப் பொறுப்பிலிருந்து இறக்கப்பட்டபோது, முஸ்லிம் அல்லாத காந்தி கவலை கொண்டார். அலி சகோதரர்களைச் சேர்த்துக்கொண்டு கிலாபத் இயக்கம் நடத்தினார். ஆனால் முஸ்லிமான ஜின்னா, கலீபாக்கள் தேவையில்லை என்றார். காங்கிரஸின் வேலை கலீபாக்களைக் காப்பாற்றுவது அல்ல என்றும் சொன்னார். ஜின்னா சமயச் சார்பற்ற கொள்கையினர்தானே! அவர் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருந்தால் இந்துக்களின் நாடு சமயச் சார்பற்றதுபோல், முஸ்லிம்களின் நாடும் சமயச் சார்பற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும்.
ஜஸ்வந்த் சிங் புத்தகத்திற்கு குஜராத் முதலமைச்சர் மோடி தடை விதித்திருக்கிறார். ஜின்னாவைப் புகழ்ந்ததும் குற்றமாம்; பட்டேலையும் நேருவையும் இடித்துரைத்ததும் குற்றமாம்.
கொக்கோகமும், காமசூத்திரமும் வெளியிடப்பட அனுமதி உள்ள நாட்டில், ஒரு சாதாரண அரசியல் கருத்துக்காக ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்தைத் தடை செய்த மோடி அரசின் செயல், நாடே வெட்கித் தலைகுனிய வேண்டிய அநாகரிகமான செயலாகும்.
நெருக்கடிநிலை காலத்தில் எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டபோது, கொதித்தெழுந்த பாரதிய ஜனதா கட்சி, அதே செயலை அவர்களுடைய கட்சி முதலமைச்சர் செய்யும்போது வாளா இருப்பது ஏன்? ஒரு தலைமையமைச்சர் பொறுப்புக்கு அறிவிக்கப்பட்ட அத்வானி செயலற்றுப் போய்விட்டதைத்தானே இது காட்டுகிறது?
ஜஸ்வந்த் சிங், ஜின்னாவைப் பாராட்டியதற்குக் கொடுத்த விலை கட்சி நீக்கம். இதே வேலையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அத்வானி செய்தார். அவர் பாகிஸ்தானுக்கே போய் ஜின்னாவைச் சமயச் சார்பற்றவர் என்று பாராட்டி விட்டு வந்தார். வந்தவுடன் அவருடைய தலைப்பாகையைப் பிடுங்கி ராஜ்நாத் சிங்குக்குச் சூட்டி விட்டார்கள். தலைவர் பதவி மாற்றம் என்பது தலைப்பாகை மாற்றம் போல் அவ்வளவு சாதாரணமாக இருக்கிறது.
இவ்வளவுக்கும் அத்வானி சாதாரணத் தலைவரில்லை. பாபர் மசூதி இடிப்பின்போது உடனிருந்தவர்; அதற்குத் தூண்டு விசையாக இருந்தவர் என்று அவரைக் குற்றம் சொல்வார்கள். அப்படிப்பட்டவர் பாகிஸ்தானுக்கே சென்று ஜின்னா சமயச் சார்பற்றவர் என்று இதுவரை பாரதிய ஜனதா முகாமில் யாரும் சொல்லி அறியாத ஓர் உண்மையைச் சொன்னார் என்றால், அது அரசியல் குறிப்புடையது மட்டுமன்று; அரசியல் திருப்பத்திற்கு இடப்பட்ட வித்துமாகும்!
அத்வானி, ஜின்னாவைப் புகழ்ந்துவிட்ட காரணத்தால், புளகாங்கிதம் அடைந்து அவர் சமாதிக்குள் புரண்டு படுக்கப் போவதில்லை. பாராட்டையும், பழிப்பையும் இறந்தவர்கள் அறிய மாட்டார்கள்.
பாகிஸ்தானின் பிரிவினையை எதிர்த்துக் கொதித்துக் கிளம்பிய ஒரு கட்சியில், ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து நாற்றுப் பிடுங்கி நடப்பட்டவரான அத்வானி, பாகிஸ்தானுக்கே போய் அந்தப் பிரிவினையின் காரண கர்த்தாவைப் பாராட்டிவிட்டு வந்தது, பூமியே ஆடியது போன்ற அதிர்ச்சியைத் தந்தது பழைய கட்சிக்காரர்களுக்கு.
ஒரு கட்சி தில்லி செங்கோட்டையில் அமர வேண்டுமானால் எல்லாத் தரப்பிலிருந்தும் பிரதிநிதித்துவம் வேண்டும். நாட்டின் பத்து விழுக்காடு மக்கள் ஒட்டுமொத்தமாகவும், முழுவீச்சாகவும் ஓர் அமைப்பை எதிர்ப்பார்களேயானால், அது அந்தக் கட்சியின் ஆட்சிப் பயணத்திற்கு மிகப்பெரிய தடையாகும்.
தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் இவர்கள் 500-லிருந்து 1000 வாக்குகள்தாம் பெற முடிகிறது. இது நகராட்சி உறுப்பினராவதற்கே போதுமானதில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள முதன்மைக் கட்சிகள் இவர்களோடு கூட்டுச் சேர இவர்கள் வைத்திருக்கின்ற வாக்கு வங்கி மோசமானதாக இருக்கிறது. போனால் போகட்டும்; நிரம்பக் கெஞ்சுகிறார்களே என்று யாராவது சேர வந்தால், கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த கதையாக ஆகி விடுகிறது. பாரதிய ஜனதாவுக்குத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சொந்தமாக வாக்கு வங்கி இல்லாவிட்டாலும், எதிர்ப்பு வாக்கு வங்கி எப்போதும் மாறாமல் இருக்கிறது. அந்த எதிர்ப்பு வாக்கு வங்கி சேர வந்தவர்களையும் சேர்த்துச் சீரழித்து விடுகிறது.
அதனால்தான் தெலுங்கு தேசம், திமுக மற்றும் அஇஅதிமுக, ஒரிசாவின் பட்நாயக் கட்சி, முன்பு இணைந்திருந்த உத்தரப் பிரதேசத்து மாயாவதி, இன்றோ நாளையோ அறுத்துக் கொள்ள நேரம் பார்க்கும் பிகாரின் நிதீஷ் குமார் என்று பல மாநிலக் கட்சிகள் பாரதிய ஜனதாவைப் பற்றிக் கொண்ட நோய், நம்மையும் தொற்றிக்கொண்டுவிடக் கூடாது என்று பயந்து ஓடுகிறார்கள்; அப்புறம் அத்வானி எப்படிச் செங்கோட்டையில் கொடி ஏற்ற முடியும்?
ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதாவின் அடிமட்ட அமைப்பாக இருக்கலாம். ஆனால் அடிமட்ட அமைப்புகளுக்கு வாக்காளர்களின் மனநிலை புரியாது. வீர சவர்க்கார் காலத்திலேயே அவர்கள் இருப்பார்கள். வீர சவர்க்காருக்குப் பிறகு கங்கையிலே ஏராளமான வெள்ளம் ஓடி வடிந்தும் விட்டதே!
சிறுபான்மை மக்கள் எப்போதும் பாதுகாப்புக் குறித்த அச்சத்தின் காரணமாக இறுக்கமாக ஒன்றுசேர்ந்து விடுவார்கள்! பெரும்பான்மை மக்களுக்கு அத்தகைய நெருக்கடி எதுவும் கிடையாது.
பாபர் மசூதி இடிப்பு இந்திய முஸ்லிம்களைப் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இணைத்தது இயற்கையே. நம்முடைய ஊர்ப் பள்ளிவாசலுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்னும் எண்ணம் அவர்களை அச்சுறுத்திக் கெட்டிப்படுத்திவிடும்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்விக்கு அத்வானியே காரணம் என்று அவர் தலையை இப்போது உருட்டுகிறார்கள்.
கூட்டணி வலிமையே தேர்தல் வலிமை என்று ஆகிவிட்ட காலத்தில், பாரதிய ஜனதாவின் மதவாதக் கொள்கையே பிற கட்சிகளெல்லாம் இதனோடு சேரத் தடை என்று உண்மை நடப்பை இனங் கண்டு கொள்ளாமல், பழைய தலைவர்களெல்லாம் வெளியேற வேண்டும் என்று பேசுவதால் இழப்பு யாருக்கு? கட்சிக்குத்தானே!
அடிப்படை உண்மை புரியாமல் மொட்டையாக இளைஞர்களை அழையுங்கள் என்றால் இதென்ன ஓட்டப்பந்தயமா? 80 வயது அத்வானியின் அறிவும், அனுபவமும், முடிவெடுக்கும் திறனும் முப்பது வயது இளைஞருக்கு இருக்க முடியுமா? தந்தையின்கீழ் பயிற்சி பெற்றுத் தகுதி பெறும் மகனைப்போல், இளைஞர்களும் பயிற்சி பெற்றுப் படிப்படியாகத்தான் வர வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியைப் புதிய தடத்தில் வழிநடத்தப் பாகிஸ்தானில் முடிவெடுத்த அத்வானி, நெருக்கடி காரணமாக அந்த முடிவில் பின்தங்கியதுதான் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குக் காரணம்.
சோஷலிசம் பேசிய காங்கிரஸ், முதலாளித்துவத்துக்கு அடிவருடுகின்ற கொள்கையை அரங்கேற்றவில்லையா? இது தலைகீழ் பல்டி ஆகாதா? திராவிடக் கருணாநிதி தேச பக்தர்கள் எல்லாம் கிடுகிடுக்கும் அளவுக்கு அதிதீவிர தேசியவாதி ஆகவில்லையா? இது தலைகீழ் பல்டி ஆகாதா? அதுபோல் அத்வானி தன்னுடைய மனதில் பாகிஸ்தானில் பூத்த சமயச் சார்பின்மைக் கொள்கைக்கு மாறுவது காலத்துக்கேற்ற மாற்றம்தானே? சிறந்ததைச் சிந்தித்தும் செயல்படுத்த முடியாத தலைமையும் குற்றமுடையது என்பான் வள்ளுவன்.
வயிற்றுப் பசியோடு தூங்கச் செல்கிறவன் இந்துவானால் என்ன? முஸ்லிமானால் என்ன? பசிக்கு என்ன மதவேறுபாடு? பசித் தீயை அணைப்பதற்குத்தானே அரசியல்!
ஜாதியைத் திருமணங்களோடு நிறுத்திக்கொண்டு, மதத்தை வழிபாட்டுத் தலங்களோடு நிறுத்திக்கொண்டு, பசியை முன்னிறுத்தி நடத்துவதுதானே முறையான அரசியல்! அதற்கு மட்டும்தானே அரசியல் கட்சிகள் வேண்டும். அதற்கு வெளியே உள்ள காரணங்களுக்காகப் பிறந்த அரசியல் கட்சிகளெல்லாம், மழைக்காலக் காளான்கள்போல, மறுமறு பொழுதுகளில் அழிந்து விடாவோ?
பழைய அமைப்புகள் காலத்திற்கேற்றவாறு தம்மைப் புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே காலத்தோடு போராடி வளர முடியும்!
காலத்தோடு பொருந்த மறுப்பவை அல்லது இயலாதவை அழியும்! இது இயற்கை நியதி. சரித்திரம் கற்றுக் கொடுத்த பாடம்!
நன்றி: தினமணி,
நவீன ஷைத்தானின் உளறல்கள்.
[ ஒரு இறை நேசரையே அல்லது நபிமார்களின் பெயரையோ குறிப்பிட்டு அவர் பொருட்டால் என்று கேட்பதற்கு இஸ்லாத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. மேலும் இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.]
இந்த தரீக்கா - ஷைகு - முரீது - பைஅத் கூட்டத்தில் நுழைந்து விட்டீர்களேயானால் மூளை சலவை செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதையும் உடல் உழைப்பு, பொருளுடன் அவர்களுக்கே அர்ப்பணம் செய்வதாக மீற முடியாத வாக்குறுதி அளித்துவிட்டு திண்டாட்டதிற்குள்ளாகி விடக்கூடிய நிலை உருவாகிவிடும்.முரீது என்பது, சூபியிஸம் மற்றும் தப்லீக் ஜமாஅத் போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும்.
இஸ்லாத்தில் தஸவ்வுஃப் என்னும் ஆன்மிக நெறிமுறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம், ஆன்மீகப் பாதை, சன்னியாசம், மறைவான ஞானம் அறியும் வழி என்றெல்லாம் அறியப்படுகிறது.
இந்த வழிகெட்டக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தாங்களாகவே இஸ்லாத்தில் புதிய கொள்கைளைப் புகுத்தினர்.
அதாவது ஒருவர் மோட்சம் அடைய வேண்டுமென்றால் அவர் ஷரீஅத்தைப் பின்பற்றுவதோடல்லாமல் இன்னும் மூன்று படித்தரங்களைக் கடந்து செல்ல வேண்டும். அவைகளாவன: 1) தரீகத் 2) ஹகீகத் 3) மஃரிபத் ஆகியனவாகும்.
இவற்றை அடைய வேண்டுமானால் ஒருவர் தனது ஆசா பாசங்கள் அனைத்தையும் துறந்து சன்னியாசம் பூண்டு இறை தியானத்தில் ஈடுபட வேண்டும்.
உலக ஆசையை துறப்பதற்கு சாதாரண மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதை நன்றாகப் புரிந்துக் கொண்ட இவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட இந்த மூன்று படித்தரங்களையும் கடந்து சென்ற ஸூஃபிகளிடம் பைஅத், முரீது வாங்கிக் கொண்டால் போதுமானது!
அவர்களை அந்த ஷெய்குகள் கரையேற்றி ஈடேற்றம் அளித்துவிடுவார்கள் என்று பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் நம்பிக்கையில் உழைப்பில் தங்களின் வயிறுகளை வளர்த்தனர் இந்த போலி ஸூஃபிகள்.
முரீது வாங்கிய ஒருவர் தன்னுடைய ஷெய்குவிடம் குளிப்பாட்டுபவனின் கையில் கிடக்கும் மைய்யித்தைப் போல இருக்க வேண்டுமாம்.
அதாவது தன்னுடைய ஷெய்கு எதைச் செய்தாலும் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாதாம்.
மேலும் முரீது கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்த போலி ஷெய்குகள் தங்களின் பக்தர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளில் இல்லாத சில திக்ருகளைக் கற்றுத் தருகின்றனர்.
முரீது வாங்கியவர்கள் இந்த திக்ருகளை ஓதிவந்தால் போதுமாம்! அவர்கள் மோட்சம் அடைந்து விடுவார்களாம்.
இன்னும் சிலர் தொழுகைக்கு கூடச் செல்வதில்லை.
அவர்களிடம் கேட்டால், எங்கள் செய்கு எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி விடுவார் என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
இன்னும் வழிகெட்ட சிலர் ஆபத்துக் காலங்களில் தங்களுக்கு முரீது வழங்கிய ஷெய்குகளை, பீர்களை அவர்கள் தங்களின் கண்காணாத தூரத்தில் இருந்தாலும் யா செய்கு அல்லது யா பீர் அவுலியா என்று அவர்களை அழைத்து உதவி தேடுகின்றனர்.
இவைகள் எல்லாம் இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தையே அசைக்கின்ற ஷிர்க்கான செயல்களாகும்.
இந்தக் கொள்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை. இஸ்லாம் என்பது திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழிமுறைகளைப் பின்பற்றுவதுமேயாகும்.அல்லாஹ் நம்மனைவருக்கும் அவனுடைய நேர்வழியைக் காட்டி, பித்அத் போன்றவற்றை தவிர்ந்தவர்களாக வாழ்வதற்கு அருள்புரிவானாகவும். ஆமீன்.
இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தை பற்றி விளக்கி கூற பல சீர்திர்ருத்த வாதிகள் இருந்தும் நம் மக்கள் இன்னும் தெளிவு பெறாமல் மூட நம்பிக்கைகளில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தனது அறியாமையின் காரணமாக சின்ன பின்னமாகிக் கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுது சொல்ல இருப்பது திரித்த கட்டுக்கதை அல்ல. படைத்த அல்லாஹுவின் மீது ஆணையாக நமது சமுதாயத்தில் நடக்கின்ற சம்பவம்.
ஒரு "தரீக்கா" வாசி கூறுவதாவது:
"எங்களின் உஸ்தாது நாங்கள் எங்கிருந்தாலும் எங்களை கண்காணித்து நேர்வழி படுத்திக்கொண்டு இருக்கிறார். நாளை மறுமையில் எங்களை சுவர்கத்திற்கு அழைத்து செல்வார் என்று அடித்து கூறுகிறான். அவன் ஒரு படித்த பட்டதாரி. இப்படி பட்டவர்களை நாம் என்ன செய்வது .......?!!!! "
இன்னும் பல நபர்கள் அவர்களின் பேச்சை கேட்டு நல்வழி கிடைக்கும் ,குடும்பத்தில் நல்ல பரக்கத் ஏற்படும், வாழ்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற தவறான எண்ணத்தில் அவர்களை சென்று மாதம் தோறும் பார்த்து வருகின்றனர்.
அந்த உஸ்தாது இருக்கும் இடமோ நமது அண்டை மாநிலம். நீங்களும் அந்த விஷயத்தை பற்றி அறிந்திருப்பீர்கள்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவரது வயதை யாரும் அறிய முடியாதம். அவர் சிலநேரங்களில் வாலிபர்போல தோற்றம் அளிக்கிறார் என்றும் சில சமயம் வயது முதிர்ந்தவர் போல இருக்கிறார் எனவும் கூறுகின்றனர். அவர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழியை சார்ந்தவர் என்றும் கூறுகின்றனர். அவர் கூறியதற்காக தனி பள்ளிவாசல் ஒன்றை கட்டியுள்ளனர்.
மேலும் அவன் கூறியது: நானும் உன்னை போலதான் இருந்தேன் அவரை பற்றி கேள்விபட்டதும் அவரை சென்று நேரில் பார்த்தும் எனக்கு எல்லாம் எண்ணமும் மாறிவிட்டது. அந்த உஸ்தாது நாங்கள் அமர்ந்திருந்த கூட்டத்தை பார்த்து கூறினார். இங்கு வந்திருக்கும் ஒருவன் என் மேல் நம்பிக்கை இல்லாமல் வந்திருக்கிறான் என்று.
அதை கேட்டதும் என் மனநிலை மாறிவிட்டது என்று கூறுகிறான். இன்னும் பல செய்திகளையும் அவன் என்னிடம் கூறினான். நான் அவனிடம் கூறினேன் சாதரண குறிகாரன்கூட தான் இதுபோல வித்தைகள் செய்வான் அதற்கு நாம் அவனை பின்பற்றி விடமுடியுமா? என்றேன். நீயும் வந்து அவரை சந்தித்தால் இதுபோல பேச மாட்டாய் என்கிறான்
இவர்களுக்கு நாம் எந்த ஒன்றை எடுத்து கூறினாலும். வீண் தர்க்கம் செய்கிறீகள். இது சைதானுடைய வேலை. உங்கள் வழியை நீங்கள் பாருங்கள். எங்கள் வழியை நாங்கள் பார்த்துகொள்கிறோம். பிடிக்கவிட்டால் ஒதுங்கிவிடுங்கள் என்கின்றனர். அல்லாஹ்தான் இவர்களை நேர்வழி படுத்த வேண்டும்.
நமது சமுதாயத்தில் நடக்கும் சில அநாச்சாரமான விஷங்களை கண்டால் மனம் அவற்றை ஏற்றுகொள்ள மறுக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்! இணை வைக்கும் இடங்களான தர்ஹாக்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களிடம் கையேந்தி நமது ஈமானை பாழாக்காமல் பள்ளிவாசலுக்கு மட்டும் சென்று,
அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துக்களைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களாகிய நாம் அங்கு அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்ற செயல்கள் நடைபெறுமானால் அவற்றைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்காமல் நம்மால் இயன்றவைகளைச் செய்து அந்த மாபெரும் ஷிர்க்கை தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு இறை நேசரையே அல்லது நபிமார்களின் பெயரையோ குறிப்பிட்டு அவர் பொருட்டால் என்று கேட்பதற்கு இஸ்லாத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை! மேலும் இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
அல்லாஹ் அதற்குரிய ஆற்றல்களை நமக்குத் தந்தருள்வானாகவும். ஆமீன்.
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.
நாம் சத்தியத்தை கூறிடவும் ,உண்மையை எடுத்துரைக்கவும் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
நாம் அஞ்ச வேண்டியது நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்தாஆலா ஒருவனுக்கே!
நமது கருத்தை எடுத்து கூறிடவும், இஸ்லாத்தில் உள்ள கோட்பாடுகளை, சத்தியத்தை மக்கள் தெளிவாக, தகுந்த ஆதாரத்துடன் பொருள்பட விளங்கிடவும் இந்த நன்றி இஸ்லாம் குரல் இணைய தளம் செயல்பட்டு வருகிறது. அதற்கு நாம் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவிற்கு நன்றி சொல்ல கடமைபட்டிருகிறோம்.
மேற்கண்ட கப்ஸா கதைகள் போல் பல கப்ஸாக்களை தப்லீக் ஜமாத்தினர் குரான் ஹதீஸை விட முக்கியத்துவம் கொடுத்து தூக்கிப்பிடிக்கும் தஃலீம் கிதாப் -- "அமல்களின் சிறப்பு "- "ஃபளாயிலே அஃமால்" ல் காணலாம்.
சிந்தித்து முடிவெடுங்கள்.
இறைவன் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக.
நன்றி: இஸ்லாம் குரல்
Wednesday, September 9, 2009
உலகளாவிய சமயக் கருத்தரங்கு
சஊதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் முனைப்பான முயற்சியால், வருகிற செப்டம்பர் 30ஆம் தேதியன்று ஜெனிவா நகரில் இக்கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் மாபெரும் மாநாடுபோல் நடக்க இருக்கின்றது. இரண்டு நாட்கள் நடக்கவிருக்கும் இக்கருத்தரங்கில் சஊதி அரேபியா, எகிப்து, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், பிரான்சு, இத்தாலி, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளின் பல்சமய அறிஞர்களும் விற்பன்னர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
"மானிட மதிப்புயர்வை உயர்த்திப் பிடிக்கும் மக்கா-மதீனாவின் காவலர் அப்துல்லாஹ்வின் முன்முயற்சி" என்பதுவே இவ்விரண்டு நாள் கருத்தரங்கின் கருப்பொருளாகும். இதற்காகவென்றே வலைத்தளம் ஒன்றை 'ராபித்தா' எனும் அனைத்துலக இஸ்லாமியக் கழகம் (Muslim World League) தொடங்கிவைத்துள்ளது. இக்கருத்தரங்கின் ஏற்பாட்டாளரே இந்த 'ராபித்தா'தான். மேற்கண்ட தலைப்பையொட்டி, பல்சமயக் கருத்துப் பரிமாற்றம், மீடியாக்களின் பங்கு, மதங்களிடையே புரிந்துணர்வு, தவறான முன்மாதிரிகளை அடையாளப்படுத்துவது போன்ற துணைத் தலைப்புகளிலும் இக்கருத்தரங்கில் விவாதங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சஊதி மன்னர் அப்துல்லாஹ்வின் முயற்சியால் நடைபெறும் நான்காவது கருத்தரங்கமாகும் இது. இதன் முதல் கருத்தரங்கு, மக்காவிலும், இரண்டாவது ஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மாட்ரிடிலும், மூன்றாவது நியூ யார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் அவைத் தலைமையகத்திலும் நடந்துள்ளன.
மக்காவில் 2008 ஜூன் நான்காம் தேதியன்று நடந்த முதலாவது மாநாட்டில் உலக முழுவதிலிருந்தும் 500க்கு மேற்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில்தான், முஸ்லிம்கள் இதர மதத்தினருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டலுக்கான திட்டம் வகுக்கப்பட்டது. அதற்கடுத்த மாதம் ஜூலை 16, 2008 அன்று 'ராபித்தா' அமைப்பு உலகின் 50 நாடுகளிலிருந்தும் சுமார் 300 பல்சமய அறிஞர்களையும் அறிவியல் மேதைகளையும் அரசியல் தலைவர்களையும் மாட்ரிடுக்கு வரவழைத்துக் கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்தது.
"வரலாற்றுப் புகழ் மிக்க இந்த மாநாடு வெற்றிபெற வேண்டுமாயின், உலக மக்கள் அனைவரையும் இணைக்கும் பாலம் எது என்பதை நாம் கண்டறிய வேண்டும். நமது ஆழிய இறைநம்பிக்கை, சிறந்த கோட்பாடுகள், மதங்களின் அடிப்படையான உயர்ந்த நீதி ஆகியவையே நம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்" என்ற அடிப்படையில் மன்னர் அப்துல்லாஹ்வின் இம்மாநாட்டுத் தலைமையுரை அமைந்தது.
-
அமெரிக்காவின் அமைதிக்கான கிருஸ்தவ-முஸ்லிம்கள் கூட்டமைப்பின் தலைவர் வில்லியம் பேக்கர்,
-
அமெரிக்க யூதக் கமிட்டியின் இயக்குநரான டேவிட் ரோசன்,
-
முஸ்லிம்-கிரிஸ்தவப் புரிந்துணர்வமைப்புத் தலைவரான ஜான் எஸ்போசிட்டோ,
-
சமாதானக் கழகத் தலைவரான தெர்ஜி ரீட் லார்சன்,
-
அமெரிக்க இஸ்லாமிய உறவுக் குழுவின் (CAIR) தலைவரான லேரி ஷா,
-
இந்தியத் துணை ஜனாதிபதி முஹம்மத் ஹாமித் அன்சாரி,
-
'யுனெஸ்கோ' தலைவர் கொய்ச்சீரோ மட்சூரா,
-
ஜெர்மனியின் கிரிஸ்தவ-முஸ்லிம் கூட்டமைப்புத் தலைபவர் தாமஸ் லெம்மன்,
-
டெல்லி குருத்துவாராவின் தலைவர் பிரேம்ஜித் சிங் சர்னா
ஆகிய உலகளாவிய பிரபல புள்ளிகளோடு சஊதி அரேபியாவின் 19 பல்துறை அறிஞர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
- தகவல் : அதிரை. அஹ்மது
Tuesday, September 8, 2009
சீன ஊடுருவல்-அமுக்கப் பார்க்கும் வெளியுறவுத்துறை
டெல்லி: இந்தியாவுக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் மாறுபட்ட குரலில் பேசி வருகின்றன.காஷ்மீரின் லடாக் பகுதிக்குள் சீன ராணுவம் நுழைந்து சிவப்பு சாயம் கொண்டு சீனா என்று எழுதி அதை தனது எல்லையாக குறித்துவிட்டுச் சென்றுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் மாறுபட்ட குரலில் பேசி வருகின்றன.
குறிப்பாக சொதப்பல்களுக்குப் பேர் போன வெளியுறவுத்துறை இது ஒரு பிரச்சனையே அல்ல என்று சொல்லி விவகாரத்தை மூடி மறைக்க முயன்று வருகிறது.
அதே நேரத்தில் பாதுகாப்புத்துறை சீனாவின் இந்தச் செயல் மிக ஆபத்தானது என்று எச்சரித்துள்ளது. இது குறித்து ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் சீனாவுடன் பேசப்படும் என்றும் கூறியுள்ளது.
ஆனால், வெளியுறவுத்துறையோ ஒன்றுமே நடக்காதது மாதிரி விவகாரத்தை அப்படி அமுக்க முயன்று வருகிறது.
இது குறித்து சீனாவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,
சீன ஊடுருவல் தொடர்பாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளை நானும் பார்த்தேன். அவர்களுடைய அடிப்படை கருத்துகளே தவறானதாகும். செய்திகளை உருவாக்குவதே செய்தி வர்த்தகத்தின் இயற்கையான நடைமுறை. உணர்ச்சிகரமான நிகழ்வுகளை செய்தியாக்குவதும் அதில் ஒரு வகை.
எனினும், 30க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களில் காட்டப்பட்ட படங்கள் குறித்து மத்திய அரசு சரி பார்க்கும் என்றார்.
வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில்,
இந்திய-சீன எல்லை மிக அமைதியாக உள்ளது. மற்ற நாடுகளுடன் உள்ள பிற எல்லைகளை ஒப்பிடும்போது இந்த எல்லை மிக அமைதியாக இருக்கிறது. அங்கு எந்த பிரச்சினையும் இல்லை.
நமது எல்லைகள் பாதுகாப்பாக உள்ளது என அனைவருக்கும் உறுதி கூறுகிறேன். தற்போதைய அத்துமீறல் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்.
இந்தியாவின் வான் எல்லைக்குள் நுழைந்தது குறித்து சீனாவிடம் ஏற்கனவே விளக்கம் கேட்டுள்ளோம். தரை வழியாக இந்திய-சீனா இடையே சுமார் 3,000 கி.மீ. நீள எல்லை உள்ளது. இது போன்ற அத்துமீறல்கள் தொடர்பாக ஒரு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இத்தகைய பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றார் பொத்தாம் பொதுவாக.
ஆனால், வெளியுறவுத்துறை இவ்வாறு கூறினாலும் பாதுகாப்புத்துறை சீனாவின் செயல்களை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும் என்கிறது.
இது குறித்து சீன எல்லைப் பகுதி ராணுவ அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் பேசுவர் என்றும் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
இதற்கு முன்னரும் இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் பல முறை ஊடுருவியிருந்தாலும் இந்தியாவுக்குள் சிவப்பு வண்ணத்தால் சீனா என்று எழுதிவிட்டுப் போனது இதுவே முதல் முறை என்கின்றனர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
சீனா மறுப்பு:
இந் நிலையில் சீன வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்ததாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. அது போன்ற சம்பவம் நடக்கவே இல்லை. எல்லைப் பிரச்சனை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலமாக நியாயமான தீர்வு காணவே சீனா விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கண்டனமாம்...
ஊடுருவல் ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்று காங்கிரஸ் அமைச்சரான எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ள நிலையில்,
இந்திய எல்லையில் அத்துமீறி சீனா நுழைந்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், சீனாவின் அத்துமீறல் கண்டனத்துக்குரியது. இது குறித்து வெளியுறவுத் துறையும், பாதுகாப்புத் துறையும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தப் பிரச்னை குறித்து உயர் நிலையில் விவாதிக்கப்படுகிறது. சீனாவுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் கூறுகையில், சீனாவின் அத்துமீறலை அரசு மிகச் சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டுள்ளது.
சீன அரசிடம் தனது கடுமையான கண்டனங்களை இந்தியா தெரிவிக்க வேண்டும். கடந்த காலங்களில் சீனாவின் அத்துமீறல் குறித்து அருணாசலப் பிரதேச பாஜக எம்.பிக்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்திய, வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனர். இந்தியாவில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தவர்களை அந் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்றார்.
சிதம்பரம் அமெரிக்கா பயணம்:
இந் நிலையில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இன்று அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 11ம் தேதி வரை அவர் அங்கு பல உயர் மட்டத் தலைவர்களை சந்திக்கிறார். அப்போது இந்த எல்லை விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் சிதம்பரம் பேசுவார் என்று தெரிகிறது.
போலி மகளிர் சுய உதவி குழுக்கள்!
இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் மகளிர் சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த குழுக்கள் மூலம் பெண்களுக்கு சுய தொழில் மேற்கொள்ள வங்கிகள் மூலம் மானிய கடன்கள், அரசின் உதவிகள், சிறப்பு பயிற்சிகள் என பல சலுகைகளை அளித்து தமிழக அரசு உற்சாகப்படுத்தி வருகின்றது.
இந்த அமைப்புகளுக்கு தேவையான நிதிகள் தொண்டு நிறுவனங்களின் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் உள்ள தொண்டு நிறுவனங்களில் ஒரே மகளிர் சுய உதவி குழுக்கள் பல்வேறு பெயர்களில் பதிவு செய்து கொண்டு வங்கிகளில் கடன் பெற்று மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முயற்சிகள் நடைபெறுவதும் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ந்து போலி மகளிர் குழு குறித்து கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் போலி மகளிர் சுய உதவிக்குழுக்களை கட்டுப்படுத்த முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Wednesday, September 2, 2009
வீட்டு சிறையிலிருந்து மீண்ட பெண் மதம் மாறி காதலரை மணந்தார்
ராஜபாளையத்தை சேர்ந்தவர் சுப்பையா. ஓய்வு பெற்ற அரசு டாக்டர். இவர் மகள் சித்ரா. எம்எஸ்சி ஐடி படித்துள்ளார். இவர் சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றினார்.
அப்போது இன்டர்நெட் மூலம் பெங்களூரை சேர்ந்த நசீருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்தனர்.
இதற்கு சித்ரா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. சித்ராவை அவர் பெற்றோர் தென்காசி அருகேயுள்ள இலஞ்சியில் அவர் தாய்மாமா வீட்டில் சிறை வைத்தனர்.
காதலருடன் சேர்த்து வைக்காமல் தன்னை குடும்பத்தினர் துன்புறுத்துவதாக நெல்லை எஸ்பி-க்கு சித்ரா அவரது தோழி மூலம் புகார் செய்தார்.
இதுகுறித்து நடவடிக்கை எஸ்பி, தென்காசி டிஎஸ்பி-க்கு உத்தரவிட்டார். டிஎஸ்பி தலைமையில் போலீசார் இலஞ்சிக்கு சென்று தாய்மாமா வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த சித்ராவை மீட்டனர்.
தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சித்ரா, நசீர் பெற்றோரிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். முஸ்லிம் மதத்திற்கு மாறி காதலரை மணப்பேன் என அப்போது சித்ரா உறுதியாக தெரிவித்தார்.
இதையடுத்து இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் நெல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். நிஷா என்ற பெயரில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய சித்ராவிற்கும், நசீருக்கும் நெல்லையில் தென்னிந்திய இஷாத்துல் இஸ்லாம் சபையில் சுன்னத்துவல் ஜமாத் முறைப்படி திருமணம் நடந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்மண்டல அமைப்பாளர் மில்லத் இஸ்மாயில் தலைமை வகித்தார்.