Tuesday, September 8, 2009

போலி மகளிர் சுய உதவி குழுக்கள்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் போலி மகளிர் சுய உதவி குழுக்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் மகளிர் சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த குழுக்கள் மூலம் பெண்களுக்கு சுய தொழில் மேற்கொள்ள வங்கிகள் மூலம் மானிய கடன்கள், அரசின் உதவிகள், சிறப்பு பயிற்சிகள் என பல சலுகைகளை அளித்து தமிழக அரசு உற்சாகப்படுத்தி வருகின்றது.

இந்த அமைப்புகளுக்கு தேவையான நிதிகள் தொண்டு நிறுவனங்களின் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் உள்ள தொண்டு நிறுவனங்களில் ஒரே மகளிர் சுய உதவி குழுக்கள் பல்வேறு பெயர்களில் பதிவு செய்து கொண்டு வங்கிகளில் கடன் பெற்று மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முயற்சிகள் நடைபெறுவதும் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதை தொடர்ந்து போலி மகளிர் குழு குறித்து கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் போலி மகளிர் சுய உதவிக்குழுக்களை கட்டுப்படுத்த முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

No comments: