Thursday, November 27, 2008

தீவிரவாதி பாண்டேவுக்கு டிச. 1 வரை போலீஸ் காவல்

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைதாகியுள்ள தீவிரவாதி சாமியார் தயானந்த் பாண்டேவை டிசம்பர் 1ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மும்பை கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த 14ம் தேதி உ.பி. மாநிலத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி பாண்டே, மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (எம்.சி.ஓ.சி.ஏ) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று அவர் எம்.சி.ஓ.சி.ஏ. கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது, அவரை போலீஸ் காவலில் விடுவிக்க அனுமதி கோரி தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் ரோஹினி சலியான் கூறுகையில், பாண்டேவின் லேப்டாப் கம்ப்யூட்டரிலிருந்து இரு ஆடியோ கிளிப்பிங்குகள் மற்றும் ஒரு வீடியோ கிளிப்பிங் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் தீவிரவாதி தயானந்த பாண்டே, பெண் தீவிரவாதி பிரக்யா சிங் தாக்கூர், தீவிரவாதி புரோஹித் மற்றும் சில முக்கிய குற்றவாளிகளின் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. வீடியோ கிளிப்பிங்கில், பாண்டே, பிரக்யா, புரோஹித் மற்றும் தீவிரவாதி பேசிக் கொண்டுள்ளனர். அவர்கள் ஆர்.டி.எக்ஸ், வேதிப்பொருட்கள், கையெறி குண்டுகள், பயிற்சி உள்ளிட்டவை குறித்து பேசிக் கொண்டுள்ளனர். ஏதோ ஒரு கோவிலில் வைத்து இவர்கள் பேசியிப்பது தெரிகிறது. அபினவ் பாரத் தீவிரவாதி அமைப்பின் மூலம் ஹிந்துக்களுக்கு பிரசாரத்தை மேற்கொள்வது எனவும் அவர்கள் பேசியுள்ளனர். எனவே பாண்டேவை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி வரை பாண்டேவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

No comments: