Monday, February 16, 2009

அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா

அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாக கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர், இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.








இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. அணுசக்தித் துறையை இந்தியாவில் நிர்மானித்த அந்தப் பெரும் சிற்பி 30.10.1909ல் பிறந்தவர். குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தூங்கவேண்டிய நேரத்திற்கும் மிகமிகக் குறைவாக ஹோமி தூங்கியதால் தந்தை ஜஹாங்கீர் தாய் மெஹ்ரூன் கவலை கொண்டு மருத்துவரிடம் காட்டியபோது குழந்தையிடம் அபார மூளைச் சக்தி இருப்பது தெரியவந்தது. எந்த அளவுக்கு இருந்த தென்றால் 15 வயதில் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு குறித்த 'தியரி'யைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இருந்தது.

1930ல் கேம்ப்ரிட்ஜில் மெக்கானிக்கல் இன் ஜினீயரிங் முடித்தவருக்கு 1934ல் ஐசக் நியூட்டன் ஃபெல்லோஷிப் விருது கிடைத்தது. 1937ல் அவர் எழுதிய Cascade Theory of Electron Showers என்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. Cosmic Radiation உள்ளிட்ட அவரது ஆய்வுகள் இயற்பியல் துறையில் புதிய சாதனைகளைப் படைத்தன. பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அழைத்தும் அவற்றை மறுத்து 1939ல் இந்தியா திரும்பிய ஹோமி பாபா 'விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்' என்று பிரகடனப்படுத்தி அதற்காகக் கடுமையாக உழைத்தார்.
31 வயதில் 'மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி' விருதும் (1941) அதற்கடுத்த ஆண்டு ஆடம்ஸ் விருதும் (1942) பெற்றார். 1945ல் Tata Institute of Fundamental Research நிறுவனம் தொடங்க இவரே காரணமாகும்.

Atomic Explosion, Production of Isotopes, Purification of Uranium முதலியன குறித்து முதன் முதலாக இந்தியாவில் ஆய்வு செய்து இந்தியாவில் அறிவார்ந்த சூழலை ஏற்படுத்திய இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறைத் தந்தை இவர். நாடு சுதந்திரமடைந்ததும் Atomic Research Centre ஒன்றை அரசு தொடங்குவதற்கு வகை செய்த ஹோமி பிரதமர் நேருவுக்கு நெருங்கிய தோழராக விளங்கினார்.மத்திய அரசில் அணுசக்தித் துறை என்று தனியாகவே ஒரு துறை பிரதமர் நேருவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தொடங்கப்பட வைத்தார். இவரது முயற்சியால் 20.01.1957ல் ஆக்கப்பணிகளுக்காக அணுசக்தி உற்பத்திக்கு வித்திடப்பட்டது. 1955ல் அணுசக்தி சம்பந்தமாக ஜெனீவாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொள்ளப் பாபாவே முன் நின்று அனைத்தையும் செய்து முடித்தார்.
ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் கடுமையான முயற்சியின் விளைவாகவே தாராப்பூர் (மகாராஷ்டிரம்), ராணா பிரதாப் சாகர் (ராஜஸ்தான்), கல்பாக்கம் (தமிழ்நாடு) ஆகிய மூன்றிடங்களிலும் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் மையங்கள் உருவாயின. இந்தியாவிலேயே தோரியம், புளூட்டோனியம் முதலியவற்றைச் சரியான முறையில் உற்பத்தி செய்யவும், விவசாயம், தொழில், மருத்துவம், உயிரியல் துறைகளுக்குப் பயன்படும் ரேடியோ ஐசோடோப்பைத் தயாரிக்கவும் ஹோமி பாபா ஆற்றிய பங்கு அளவிடற்கரியது.

பெங்களூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் கெளரி பிட்னூர் எனுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் பாதாள அணு வெடிப்பு சம்பந்தமான ஆராய்ச்சி மையம் ஒன்று அமையவும்,கல்கத்தா, அஹமதாபாத், கேரளா, காஷ்மீர் முதலிய இடங்களில் பல்வேறு விஞ்ஞான மையங்கள் அமையவும், அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாகவும் கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.

18.05.1974ல் பொக்ரான் (ராஜஸ்தான்) முதல் அணுசக்திச் சோதனையின் வெற்றி மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவைத் தொடர்ந்து உலகளவில் ஆறாவது நாடாக இடம்பெற்று இந்தியா உயர்ந்ததென்றால் அதன் அடிப்படை நாதமாக விளங்கியது பாபா ஆரம்பித்து வளர்த்து வந்த கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி முயற்சிகளும்தான்.

அனைத்துலக மாநாட்டிற்காக 24.01.1966 அன்று ஏர் இந்தியா போயிங் 707 விமானத்தில் பயணித்தபோது பனிப்புயல் தாக்க ஏற்பட்ட விபத்தில் வபாத்தானவர் ஹோமி பாபா. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் பல்கலைக் கழகங்களிடமிருந்தும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் ஹோமி பாபா. இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம் 12.01.1967 முதல் 'பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்' ( Bhabha Atomic Research Centre ) எனப் பெயரிடப்பட்டது.
மத்திய அரசு அக்டோபர் 2008 அக்டோபர் 2009 ஹோமி ஜஹாங்கீர் பாபா நூற்றாண்டு என்று அறிவித்திருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் இவர் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். என்றாலும் திருமணம் கூட செய்துகொள்ளாமல் இந்திய அணுவிஞ்ஞானத் துறைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஹோமி ஜஹாங்கீர் பாபா பிற முஸ்லிம் அறிவியலாளர்கள் மற்றும் தலைவர்களைப் போன்றே மறைக்கப்படுகிறாரென்பதும் மறக்கடிக்கப்படுகிறாரென்பதும் வேதனைக்குரியதே!



நன்றி : இனிய திசைகள் மாத இதழ் ஜனவரி 2009

No comments: