Saturday, March 21, 2009

பிரிட்டனுக்குள் நுழைய மோடிக்கு விசா வழங்கக் கூடாது

லண்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை "ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் பிரதிநிதி' என அறிவித்து, அவர் பிரிட்டனில் நுழைவதற்கான விசா அனுமதியை பிரிட்டிஷ் அரசு நிராகரிக்க வேண்டும் என்று அந்த நாட்டில் வசிக்கும் இந்திய முஸ்லிம்கள் வலியுறுத்தியுள்ளனர்.

லண்டனில் வருகிற மே மாதம் இந்தியர்கள் மாநாட்டுக்கு டெü ஜோன்ஸ் பைனான்சியல் நியூஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்கான அழைப்பை நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக பிரிட்டிஷ் உள்துறைச் செயலர் ஜேக் ஸமித்திற்கு, பிரிட்டனில் உள்ள இந்திய முஸ்லிம்கள் கவுன்சில் தலைவர் கே. முகமது முன்னாப் ஸீனா அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

குஜராத்தில் கடந்த 2002 முதல் முதல்வராக உள்ள நரேந்திர மோடி அந்த மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களுக்கு அவர்தான் மூலகாரணம். அவர் பிரிட்டனுக்கு வர அனுமதித்தால், மத நல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்படும்.

இதே காரணத்துக்காக, கடந்த 2005-ல் நரேந்திர மோடி அமெரிக்காவில் நுழைவதற்காக வழங்கப்பட்ட விசா திரும்பப் பெறப்பட்டது. எனவே, அமெரிக்காவைப் போல, பிரிட்டனும் மோடிக்கு விசா வழங்காமல் நிராகரிக்க வேண்டும். மேலும், மோடியின் லண்டன் பயணத்தை ரத்து செய்யுமாறு இந்திய அரசிடம் பிரிட்டன் அறிவுறுத்த வேண்டும்.

No comments: