Tuesday, January 12, 2010

ஏசி கோளாறு-விமானத்தில் பெண் பயணி மயக்கம்

அகமதாபாத்: கோவாவில் இருந்து அகமதாபாத் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் ஏசி செயலிழந்ததால் பயணிகள் பெரும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். இதில் ஒரு பெண் பயணி மயங்கி விழுந்தார்.

இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. ஆனால், இன்று தான் விவகாரம் வெளியி்ல் வந்துள்ளது.

அன்றைய தினம் அரை மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு அந்த விமானம் கோவாவில் இருந்து அகமதாபாத் கிளம்பியது.

விமானம் பறக்க ஆரம்பிக்கும் முன்பே ஏசி செயல்படவில்லை. இதனால் விமானத்துக்குள் கடும் வெக்கை நிலவியது. பலர் மூச்சுவிடவே பலர் சிரமப்பட்டனர். இது குறித்து ஏர் ஹோஸ்டஸ்களிடம் பயணிகள் விசாரித்தபோது விமானம் பறக்க ஆரம்பித்தது ஏசி செயல்படும் என்றார்.

இதை நம்பி பயணிகள் அமைதியாயினர். ஆனால், விமானம் பறக்க ஆரம்பித்தும் கூட ஏசி செயல்படவில்லை. இதனால் நடுவானில் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் அதிகரித்தது.

ஒரு பெண் பயணி மயங்கி விழுந்தார். இதையடுத்து விமானப் பணிப் பெண்கள் விமானியிடம் ஓடிச் சென்று தகவலே தரவே அந்த விமானம் மும்பைக்குத் திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அங்கு ஏசி கருவி சரி செய்யப்பட்டு மீண்டும் அந்த விமானம் கிளம்பியது. 4 மணி நேரம் தாமதமாக இரவு 10 மணிக்கு அகமதாபாத் போய் சேர்ந்தது.

இப்போது பயணிகள் தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என கோர ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இந்த விவகாரம் குறித்து கருத்து சொல்ல மறுத்து வருகிறது.

No comments: