Tuesday, August 11, 2009

கடல் உள்வாங்கியது:பட்டினப்பாக்க பதட்டம்

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடலில் ஏற்படும் திடீர் மாற்றத்தினால் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள் பீதி அடைந்து காணப்பட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் போலீசார், சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் சுனாமி வரும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் இங்கு வசித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலை வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பட்டினப்பாக்கம் பகுதி கடலில் கடந்தசில மாதங்களாகவே இருந்து வந்தகடல் கொந்தளிப்பு இன்று காணப்பட வில்லை. சுனாமி எச்சரிக்கையையும் மீறி சில வாலிபர்கள் கடலின் தன்மையை நோட்டமிட்டப்படி இருந்தனர்.

வழக்கமான கொந்தளிப்புடன் காணப்படும் கடல் இன்று சுமார் 200 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்பட்டது. இங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பின் பகுதியை தொட்டபடி நிற்கும் கடல் அலைகள் இன்று பல அடி தூரத்துக்கு அப்பால் நகர்ந்து சென்றது.

பின்னர் சிறிது நேரத்திலேயே கொந்தளிப்பு இல்லாமல் வழக்கமான இடத்துக்கு கடல் அலைவந்து சென்றது. 10 நிமிடத்துக்கு ஒரு முறை இது போன்ற மாற்றங்கள் காணப்பட்டது. ஆனால் சுனாமி ஏதும் ஏற்பட வில்லை. தொடர்ந்து கடல் மாற்றத்தால் அந்த பகுதியில் பீதி காணப்படுகிறது.

No comments: